ஆப்நகரம்

தர்காவுக்கு செல்ல முயன்ற பாஜகவினர்: மதுரையில் பரபரப்பு!

காவல்துறை அனுமதியின்றி தர்காவுக்கு செல்ல முயன்றதாக பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்

Authored bySM Prabu | Samayam Tamil 11 Dec 2022, 11:11 am
மதுரை கோரிப்பாளையம் தர்காவிற்கு காவல்துறை அனுமதியின்றி செல்ல முயன்றதாக பாஜக சிறுபான்மையினர் அணி தேசிய தலைவர் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு 3 மணி நேரத்திற்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதனால், மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.
Samayam Tamil தர்காவுக்கு செல்ல முயன்ற பாஜகவினர்
தர்காவுக்கு செல்ல முயன்ற பாஜகவினர்


மதுரை கோரிப்பாளையம் தர்காவிற்கு பாஜக சிறுபான்மையினர் அணி தேசிய தலைவர் சித்திக், மற்றும் தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம், மாநில தலைவர் டெய்சி ஆகியோர் புதூர் பகுதியில் இருந்து செல்ல முயன்றனர். அப்போது அங்கு வந்த காவல்துறையினர், அனுமதியின்றி செல்ல முயன்றதாக கூறி பாஜக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையை மீறியும் பாஜக நிர்வாகிகள் தர்காவுக்கு செல்ல முயன்றதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் காவல்துறையினர் மற்றும் பாஜகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகிகளை புதூர் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். தொடர்ந்து, இதனை கண்டித்து, பாஜக மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசன், மாவட்ட செயலாளர் மகா சுசீந்திரன், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்ட ஏராளமான பாஜக நிர்வாகிகள் காவல்நிலையம் முன்பாக திரண்டனர். இதனால், அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

காவி சாயம் பூசிய ரசிகர்கள்: சிக்கிட்டீங்களே ரஜினி!
இதனைத்தொடர்ந்து, சுமார் 3மணி நேரத்திற்கு பின்னர் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகிகள் விடுவிக்கப்பட்டனர். அப்போது, காவல்நிலையத்திற்கு முன்பாக திரண்டிருந்த பாஜகவினர் ஆளும் திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய தலைவர் மற்றும் பாஜக மாநில பொதுச்செயலாளர் ஆகியோர், காவல்துறையினரை மத மோதலை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாக குற்றம் சாட்டினர். இது ஜனநாயக படுகொலை என தெரிவித்த அவர்கள், வழிபாட்டிற்கு தடை விதித்து கைது செய்யும் நடவடிக்கைக்கு ஸ்டாலின் அரசு வெட்கப்பட வேண்டும் என்றனர். மேலும், விரைவில் ஒரு நாள் அனைவரையும் திரட்டி கோரிப்பாளையம் தர்ஹாவிற்கு செல்வோம் எனவும் அவர்கள் அறிவித்தனர்.

மதுரை கோரிப்பாளையம் தர்காவுக்கு அனுமதியின்றி செல்ல முயன்ற பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதும், அதனை கண்டித்து காவல்நிலையம் முன்பு பாஜகவினர் திரண்டதாலும் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
எழுத்தாளர் பற்றி
SM Prabu
நான் மணிகண்ட பிரபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை, எழுத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் பயணித்து வருகிறேன். அரசியல், நீதிமன்றம், அரசு சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். செய்திகளை தாண்டி அதன் பின்புலங்களை ஆராய்ந்து கட்டுரைகளாக தந்து வருகிறேன். பத்திரிகையாளராக சாமானிய மக்களின் குரலாக ஒலிப்பதில் எவ்வித சமரசமும் இன்றி பணியாற்றி வருகிறேன். Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக தற்போது பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி