ஆப்நகரம்

மதுரையில் புதிய முயற்சி: போட்டி தேர்வர்கள் படிக்க தனி பூங்கா!

மதுரையில் போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கான படிப்பக வளாகம் தொடங்கப்பட்டுள்ளது

Authored bySM Prabu | Samayam Tamil 29 Jan 2023, 12:03 pm
மத்திய மற்றும் மாநில அரசுகளால் பல்வேறு போட்டித் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இத்தகைய போட்டித் தேர்வுகள் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய மற்றும் மாநில அரசு வேலைகளில் சேர்க்கப்படுகின்றனர். போட்டித் தேர்வில் முதன்மைத் தேர்வு, மெயின் தேர்வு , நேர்க்காணல் என மாணவர்கள் பல்வேறு சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே இந்திய ஆட்சிப் பணி முதல் கிராம நிர்வாக அலுவலர் வரையிலான பணிகளுக்கான வேலையில் அமர்த்தப்படுகிறார்கள்.
Samayam Tamil சு.வெங்கடேசன் எம்.பி.,
சு.வெங்கடேசன் எம்.பி.,


இதற்காக மாணவர்கள் தங்களை தீவிரமாக தயார் படுத்தியும் வருகிறார்கள். பயிற்சி மையங்களில் சேர்ந்து படிப்பது, மாணவர்களுடன் கூட்டாக அமர்ந்து தேர்வுக்கு படிப்பது, தனியாக தேர்வுக்கு படிப்பது என பல்வேறு வகைகளில் மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில், போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கான படிப்பக வளாகம் மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது. நமக்கு நாமே திட்டத்தின் மூலமும், மதுரை எம்.பி., சு.வெங்கடேசனின் நிதி பங்களிப்பிலும், மதுரையில் புதிய முயற்சியாக, மாநிலத்தில் முதன்முறையாக போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்காக தனி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை உலக தமிழ் சங்கத்திற்கு அருகே தங்கராஜ் சாலையில் அரசுத்துறை சார்ந்த போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்கள் முறைப்படி தங்களை தயார் செய்வதற்கு வசதியாக, அமர்ந்து படிக்கும் விதமாக நமக்கு நாமே திட்டத்தில் ரூ.45 லட்சம் மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.30 இலட்சம் என மொத்தம் ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த படிப்பக வளாகம் கட்டப்பட்டுள்ளது.

பெண்கள் சுயமாக முடிவெடுக்க வேண்டும்: கனிமொழி எம்.பி., பேச்சு!
இந்த படிப்பக வளாகத்தில் பயிற்சி மைய கட்டிடம், படிப்பக கூடாரம், கண்காணிப்பு கேமிரா வசதிகள், அமரும் இருக்கைகள், நடைபாதை, கழிப்பறைகள், நுழைவுவாயில், சுற்றுசுவர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஒருங்கிணைந்த படிப்பக மையத்தை அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் பயன்பாட்டுக்கு இன்று திறந்து வைத்தனர்.

இதுகுறித்து மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் கூறுகையில், “போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கான ‘படிப்பக வளாகம்’ துவக்கியுள்ளோம். மதுரையில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பல்வேறு பூங்காக்களில் உட்கார்ந்து படித்து வருகின்றனர். அப்படி தயாராகும் மாணவர்களுக்கு அதாவது போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் உட்கார்ந்து படிப்பதற்காக தனி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. நீண்ட நாள் கனவான இந்த ஒருங்கிணைந்த படிப்பக பூங்கா ஒரு துவக்கம்தான். மிகச்சிறப்பாக இதனை வழிநடத்தி கொண்டு செல்ல பல்வேறு திட்டங்கள் உள்ளன. வரும் நாட்களில் அவை படிப்படியாக நிறைவேற்றப்படும்.” என்றார்.
எழுத்தாளர் பற்றி
SM Prabu
நான் மணிகண்ட பிரபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை, எழுத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் பயணித்து வருகிறேன். அரசியல், நீதிமன்றம், அரசு சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். செய்திகளை தாண்டி அதன் பின்புலங்களை ஆராய்ந்து கட்டுரைகளாக தந்து வருகிறேன். பத்திரிகையாளராக சாமானிய மக்களின் குரலாக ஒலிப்பதில் எவ்வித சமரசமும் இன்றி பணியாற்றி வருகிறேன். Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக தற்போது பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி