ஆப்நகரம்

அமைச்சர் ஸ்டிக்கரோடு மதுரையில் பரிசுப் பொருட்கள்: கண்டுபிடித்த திமுக!

திருமங்கலம் கப்பலூர் தொழிற்பேட்டையில் அதிமுகவினர் பரிசுப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக திமுகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

Samayam Tamil 18 Mar 2021, 10:04 am
திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டனர். பரிசுப் பொருட்கள் எடுக்கப்பட்ட குடோனை உடைத்து உள்ளே செல்ல திமுகவினர் முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Samayam Tamil அமைச்சர் ஸ்டிக்கரோடு மதுரையில் பரிசுப் பொருட்கள்: கண்டுபிடித்த திமுக!


மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலூர் தொழிற்பேட்டையில் அதிமுகவினர் பரிசுப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக திமுகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பறக்கும்படை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையைத் தொடங்க காலதாமதம் ஆனதால் திமுகவினர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது

திருமங்கலம் அருகே கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழில் அதிபர் சங்க குடோனில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் படம் பொறித்த பரிசுப் பொருட்கள், கம்ப்யூட்டர் இருப்பதாகக் கூறி திமுகவினர் குறிப்பிட்ட பகுதியில் குவியத் தொடங்கினர்.

அதிமுக, பிஜேபி ரெண்டுமே ஜெயிக்கக்கூடாது... மதுரையில் மக்களிடம் சொன்ன ஸ்டாலின்!

அதேபோல் பறக்கும் படை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் பறக்கும் படையினர், போலீசார் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உரிய நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்தனர். அங்குக் குவிந்திருந்த திமுகவினர் குடோனில் பல கோடி ரூபாய் பணம் இருப்பதாகவும் உடனடியாக திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து நிலைமையைக் கட்டுக்குள் வைக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி