ஆப்நகரம்

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பிரிட்டிஷ் எம்.பிக்கள் கடிதம்!

விவசாயிகள் போராட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென 36 பிரிட்டிஷ் எம்.பிக்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

Samayam Tamil 5 Dec 2020, 9:40 pm

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து இன்றுடன் பத்து நாட்களாக டெல்லியில் ஏராளமான விவசாயிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுடன் அரசு நடத்திய முதல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாம் பேச்சுவார்த்தையிலும் விவசாயிகளுக்கு உடன்பாடு இல்லை.
Samayam Tamil farmers protest


டிசம்பர் 8ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்த விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

மேலும், விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவளிப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்தால் இந்தியா-கனடா உறவில் பாதிப்பு ஏற்படும் என இந்திய அரசு எச்சரித்துள்ளது. ஆனால், உலகில் எந்த பகுதியிலும் உரிமைகளுக்காக அமைதியாக நடக்கும் போராட்டங்களுக்கு கனடா தொடர்ந்து ஆதரவளிக்கும் என ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்துக்கு வணிகர் சங்கங்கள் ஆதரவு!

இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டிஷ் பஞ்சாபிகள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் டாமினிக் ராபிக்கு 36 பிரிட்டிஷ் எம்.பிக்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் இக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இதில் இந்திய வம்சாவளி எம்.பிக்களான வீரேந்திர ஷர்மா, சீமா மல்ஹோத்ரா உள்ளிட்டோரும் கையெழுத்திட்டுள்ளனர். விவசாயிகள் போராட்டம் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சருடன் அவசர கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யும்படி இக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகள் அமைதியாக போராட்டம் நடத்துவதற்கு உரிமை இருப்பதாக ஐநா பொதுச்செயலாளர் அண்டோனியோ கட்ரஸும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி