ஆப்நகரம்

கமலா ஹாரிஸின் அருகிலேயே பணிபுரியவிருக்கும் இந்திய வம்சாவளி பெண்!

வெள்ளை மாளிகையின் துணை பத்திரிகை செயலாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சப்ரினா சிங் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்

Samayam Tamil 10 Jan 2021, 4:38 pm
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன், துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் வருகிற 20ஆம் தேதி பதவியேற்கவுள்ளனர். இதில் கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அவரது தாய் வழி சொந்தங்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
Samayam Tamil சப்ரினா சிங் (இடது), கமலா ஹாரிஸ் (வலது)
சப்ரினா சிங் (இடது), கமலா ஹாரிஸ் (வலது)


இதையடுத்து, ஜோ பைடன் ஆட்சியில் முக்கிய பதவிகள் மற்றும் பொறுப்புகளில் யாரை நியமிப்பது என அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்திய வம்சாவளி நபர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு அதன்படி பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவில் கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடுவதற்காக தேசிய தொற்று பணிக்குழு ஒன்றை ஜோ பைடன் அமைத்துள்ளார். அதில் இந்தியர்கள் இருவர் இடம் பிடித்துள்ளனர். வெள்ளை மாளிகையில் இந்திய வம்சாவளிகளான கௌதம் ராகவன், வினய் ரெட்டி ஆகியோருக்கு இயக்குநர் அந்தஸ்திலான பதவிகளை ஜோ பைடன் வழங்கியுள்ளார். மேலும், வெள்ளை மாளிகையின் டிஜிட்டல் வியூக அலுவலகத்தின் கூட்டணி மேலாளராக காஷ்மீரில் பிறந்த அய்ஷா ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகையில் துணை அதிபருக்கான துணை பத்திரிகை செயலாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சப்ரினா சிங் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸின் பிரசார குழுவின் செய்தி தொடர்பாளராக சப்ரினா சிங் இருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

H-1B Visa தடைகளை நீக்க ஜோ பைடனிடம் இந்தியர்கள் கோரிக்கை!

முன்னதாக, 2016ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தலில் ஹிலாரி க்ளிண்டனின் தேர்தல் பிரசாரத்தில் பிராந்திய தகவல் தொடர்பு இயக்குனராகவும், அதற்கு முன்பு ஜனநாயக தேசிய குழுவில் தகவல் தொடர்பு துணை இயக்குனராகவும் சப்ரினா சிங் பணியாற்றியுள்ளார்.


வெள்ளை மாளிகையில் துணை அதிபருக்கான துணை பத்திரிகை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “கமலா ஹாரிஸின் கீழ் பணிபுரிவது மரியாதையானது. அமெரிக்க மக்களுக்கான பணியை தொடர்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த அணியில் சேர நான் மிகவும் நன்றியுள்ளவளாகவும் நம்பமுடியாத அளவிற்கு தாழ்மையுடனும் இருக்கிறேன்” என்று சப்ரினா சிங் பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி