ஆப்நகரம்

வேளாண் சட்டங்களை எதிர்த்து NRI மக்கள் போராட்டம்!

மோடி அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து பல்வேறு நாடுகளில் என்ஆர்ஐ மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 15 Oct 2020, 5:29 pm

வேளாண் திருத்த சட்டங்களை மோடி அரசு அண்மையில் நிறைவேற்றியது. இந்த சட்டங்களுக்கு பல தரப்புகளில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இப்புதிய சட்டங்களால் கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டும் லாபமடைவார்கள் எனவும், விவசாயிகள் சுரண்டப்படுவார்கள் எனவும் விவசாய சங்கங்களும், எதிர்க்கட்சிகளும் கூறுகின்றனர்.
Samayam Tamil Motorcycle Rally (Photo: Tribune)


மறுபுறம், புதிய சட்டங்களால் விவசாயிகள் லாபம் பெறுவார்கள் எனவும், நாடு முழுவதும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்ய முடியும் எனவும் பிரதமர் மோடி கூறுகிறார். இச்சட்டங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் விவசாய சங்கமும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், போராட்டங்கள் வெளிநாடுகளுக்கும் பரவியுள்ளதாக தெரிகிறது. அமெரிக்கா, கனடா, இத்தாலி, இங்கிலாந்து, பிரான்ஸ் என பல நாடுகளிலும் என்ஆர்ஐ மக்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சில தினங்களுக்கு பஞ்சாப் என்ஆர்ஐ மக்கள் சார்பில் பேரணி நடத்தப்பட்டது.

NRI அந்தஸ்து: இதென்னடா புதிய தலைவலி!

இதேபோல கனடா தலைநகர் டொரோண்டோவிலும் அக்டோபர் 11ஆம் தேதியன்று பேரணி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான என்ஆர்ஐ மக்கள் பங்கேற்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். பிராம்ப்டனில் உள்ள குருத்வாரா குரு நானக் மிஷன் செண்டரில் தொடங்கிய இந்த பேரணி டொரோண்டோவில் உள்ள சீக்கிய ஆன்மீக மையத்தில் முடிவடைந்தது.

பிரான்ஸ் நாட்டிலும் மோடி அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து என்ஆர்ஐ மக்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதகரத்திற்கு வெளியே பஞ்சாபி என்ஆர்ஐ மக்கள் சார்பில் அக்டோபர் 4 அன்று போராட்டம் நடைபெற்றது.

இதேபோல இத்தாலியில் மிலன் நகர், கனடாவில் வான்கூவர் என பல இடங்களில் என்ஆர்ஐ மக்கள் சார்பில் வேளாண் சட்டங்களை கடுமையாக எதிர்த்து போராட்டங்களும், பேரணிகளும் நடைபெற்றுள்ளன.

அடுத்த செய்தி