ஆப்நகரம்

ஓமானில் தமிழுக்கு வந்த சோதனை; கொதித்தெழுந்த தமிழர்கள்!

தமிழ் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளில் தமிழையும் சேர்க்க வேண்டும் என்று ஓமான் வாழ் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Samayam Tamil 3 Sep 2020, 3:54 pm
ஓமான் நாட்டில் வேலை மற்றும் தொழில் செய்யும் ஏராளமான தமிழர்கள் வசித்து வருகின்றனர். அங்கேயே குடும்பத்துடன் பல ஆண்டுகளாக வசித்து வருவதால், அங்குள்ள பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர். அந்நாட்டில் மத்திய அரசின் CBSE பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் 22 இந்திய சமூகப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 46 ஆயிரம் இந்திய மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளிகளில் இந்திய மொழிகளான இந்தி, சமஸ்கிருதம், மலையாளம் ஆகிய மொழிப் பாடங்கள் நடத்தப்படுகின்றன. மேலும் ஐரோப்பிய மொழிகளான பிரெஞ்ச், ஜெர்மன் ஆகிய மொழிகளும் கற்பிக்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil Schools - File Image


கடந்த 1972ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இப்பள்ளிகளில் ஒரு மொழிப் பாடமாக தமிழ் அங்கீகரிக்கப்படவில்லை என்பது எவ்வளவு வேதனையான விஷயம். அதுவும் பழம்பெருமை வாய்ந்த செம்மொழிக்கு ஓமானில் இடமில்லையா என்று அங்குள்ள தமிழர்கள் கொந்தளித்துள்ளனர்.

தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஓமான் இந்திய தூதரகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளனர். இதுபற்றி ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரிக்கு ஓமானில் வாழும் தமிழர்கள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

இல்லாத ஸ்கூலுக்கு இவ்ளோ ஃபீஸா? கொதிக்கும் பெற்றோர் - அடுத்த அதிரடி இதுதான்!

அதில் தங்கள் பிரச்சினையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இந்த சூழலில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -க்கு எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி கடிதம் எழுதியுள்ளார்.

அதில், மத்திய அரசிடம் வலியுறுத்தி ஓமானில் செயல்படும் இந்தியப் பள்ளிகளில் தமிழை ஒரு மொழிப் பாடமாக நடத்த மாநில அரசு ஆவண செய்ய வேண்டும். இதன்மூலம் அந்நாட்டில் உள்ள தமிழ் மாணவ, மாணவிகள் பெரிதும் பயன்பெறுவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடமும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் தனக்கு கடிதம் எழுதிய ஓமான் தமிழர்களிடம், இந்த விவகாரத்தில் முழு கவனம் செலுத்தப்படும் என்று தமிமுன் அன்சாரி உறுதியளித்துள்ளார்.

அடுத்த செய்தி