ஆப்நகரம்

மக்கள் முன்பு நிறுத்தி 'தலித்' இளைஞரை அவமானம்.. திமுக ஒன்றிய செயலாளர் சாதி வெறி..!

கோவிலுக்குள் சென்ற தலித் இளைஞரை வன்னியர் சமூக மக்கள் முன்பு நிறுத்தி கொலை மிரட்டல் விடுத்த திமுக ஒன்றிய செயலாளரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 30 Jan 2023, 3:06 pm
சேலம் சூரமங்கலம் காவல் எல்லைக்கு உட்பட்ட திருமலைக்கிரியில் தலித் இளைஞன் பிரவீன்குமார் என்பவர் கடந்த 26 ஆம் தேதி இரவு அங்குள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் கருவறை முன்பு நின்று சாமி கும்பிட வேண்டுமென்று கூறியுள்ளார்.
Samayam Tamil salem news


அதற்கு அங்குள்ள இடைநிலை சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே தலித் இளைஞன் பிரவின் குமார் திரும்ப வந்துவிட்டார். இந்த விஷயத்தை அப்பகுதியில் உள்ள திமுக-வின் சேலம் ஒன்றிய செயலாளரும், திருமலைகிரி ஊராட்சி மன்ற தலைவருமான மாணிக்கம் என்பவரிடம் தகவல் கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து அவர் திருமலைகிரி ஊர் பெரிய மாரியம்மன் கோவில் முன்பு பஞ்சாயத்து கூட்டி கடந்த 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை இளைஞன் பிரவீன்குமார் மற்றும் அவரது தாய், தந்தைக்கு தகவல் சொல்லி பஞ்சாயத்துக்கு கண்டிப்பாக வர சொல்லியுள்ளனர்.

அதன்படி,பிரவீன் குமாரும் அவரது தாய், தந்தை ஆகியோர் திருமலைகிரி பெரிய மாரியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது, இளைஞன் பிரவீன்குமாரை அவரது தாய், தந்தை மற்றும் அங்குள்ள மக்கள் முன்னிலையில் தகாத வார்த்தைகளால், கொச்சை கொச்சையாக திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளார் மாணிக்கம்.

மேலும், எங்களை பகச்சிக்கிட்டா நீங்க தொழில் பண்ண முடியாது; இங்க இருக்க முடியாது' உங்கள அடித்துக் கொன்று விடுவேன் என மாணிக்கம் மிரட்டி உள்ளார். மேலும், அவர் மிரட்டி கொண்டிருக்கும்போதே அப்பகுதியை சேர்ந்த மற்றொரு நபர், இவன் இந்த கோவில் 18 பட்டிக்கு சொந்தமானது என்று பேசுகிறான், இவன் யாரோ சொல்லிக் கொடுக்கும் பேச்சை கேட்டு தான் இப்படி பேசுகிறார் என்று சாதி ஆதிக்க வெறியோடு பேசும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் தலித் மக்கள் பயன்படுத்துகின்ற குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விஷயம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒன்றிய செயலாளரும், தற்போதைய திருமலைகிரி ஊராட்சி மன்ற தலைவருமான மாணிக்கம் என்பவர் தலித் இளைஞன் பிரவீன் குமாரையும் அவரது அப்பாவையும் பலர் முன்னிலையில் தகாத வார்த்தைகளால் திட்டி சாதிய வன்மத்தோடு நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஊராட்சி மன்ற தலைவரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அமைப்பு சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி