ஆப்நகரம்

என்ன ஆட்சியோ? எடப்பாடில மின் இணைப்பு வாங்குனா கூட லஞ்சம்!

விசைத்தறி கூடம் அமைப்பதற்கு புதிய மின் இணைப்பு பெற கூலித் தொழிலாளியிடம் நான்காயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்சார வாரிய உதவி பொறியாளர் புரோக்கர் உட்பட இருவர் சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 13 Apr 2021, 9:18 am
சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட கணியம்பாடி வெள்ளாளபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விசைத்தறி சதீஷ். கூலித் தொழிலாளி. இவர் விசைத்தறி கூடம் அமைக்க புதிய மின் இணைப்பு கோரி தேக்கம்பட்டி மின்சார வாரிய அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.
Samayam Tamil என்ன ஆட்சியோ? எடப்பாடில மின் இணைப்பு வாங்குனா கூட லஞ்சம்!


அப்போது அந்த அலுவலகத்திலிருந்த அலுவலர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்படி கூறியுள்ளனர். இதையடுத்து கூலித் தொழிலாளியான சதீஷ் தேக்கம்பட்டி பகுதியில் உள்ள ஆன்லைன் மையத்திற்கு சென்று மைய உரிமையாளரான வெங்கடாசலத்தை அணுகியுள்ளார். வெங்கடாசலம் ஆன்லைனில் மின் இணைப்பு பெறுவதற்குப் பதிவு செய்வதற்கு ஆயிரம் ரூபாய் பணம் கேட்டுள்ளார்.

அதன்படி ஆயிரம் ரூபாய் பணம் கட்டி மின் இணைப்பு பெற சதீஷ் பதிவு செய்துள்ளார். அதேபோல் தேக்கம்பட்டி மின்சார வாரிய அலுவலகத்தில் மின்சாரவாரியம் நிர்ணயித்த புதிய மின் இணைப்பு கட்டணம் 8 ஆயிரத்து 368 ரூபாய் கட்டணம் செலுத்தி உள்ளார்.

இதைத் தொடர்ந்து தனது புதிய மின் இணைப்பு பதிவு எந்த நிலையில் உள்ளது என சதீஷ் மின்சார வாரிய உதவிப் பொறியாளர் குணசேகரனிடம் விசாரித்துள்ளார். குணசேகரன் கணக்கு பிரிவில் பணியாற்றும் ஏழுமலை என்பவரிடம் அனுப்பி வைத்துள்ளார்.

கணக்குப் பிரிவு அலுவலர் ஏழுமலை புதிய மின் இணைப்பு பெற உதவிப் பொறியாளர் குணசேகரனுக்கு 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வழங்கவேண்டும் என கூறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேட்பாளருக்கு கொரோனா... சேலம் அதிமுகவினர் அதிர்ச்சி!

இதுகுறித்து விசைத்தறி கூலித் தொழிலாளியான சதீஷ் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்து அதன் அடிப்படையில் முதற்கட்டமாக தேக்கம்பட்டி மின்சார வாரிய உதவிப் பொறியாளர் குணசேகரன் மற்றும் கணக்குப் பிரிவு அலுவலர் ஏழுமலை ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய 4 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை சதீஷிடம் கொடுத்து அனுப்பி உள்ளனர். பணத்தைப் பெற்றுக்கொண்ட சதீஷ் உதவிப் பொறியாளர் குணசேகரனிடம் லஞ்சப் பணத்தைக் கொடுக்க முற்பட்டுள்ளார்.

அப்பொழுது குணசேகரன் அலுவலக வெளியிலுள்ள ஆன்லைன் மைய உரிமையாளர் வெங்கடாசலத்திடம் அதைக் கொடுக்கும்படி கூறினார். இதையடுத்து போலீசார் புரோக்கர் வெங்கடாசலம், அலுவலர் குணசேகரனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஏழுமலை தப்பி ஓடிவிட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி