ஆப்நகரம்

வீட்டு வாசலில் போர்டு பிடித்து நின்ற எடப்பாடி பழனிசாமி: சசிகலாவால் களையிழந்த அதிமுக!

திமுக தலைமையிலான முக ஸ்டாலின் அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர் வீட்டு முன்பு கோரிக்கை அட்டைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

Samayam Tamil 28 Jul 2021, 11:21 am
திமுக தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்றுக் கடந்த மூன்று மாதங்களாக ஆட்சி செய்து வருகிறது. இந்த சூழலில் திமுக அரசு சட்டமன்ற தேர்தலின்போது பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Samayam Tamil வீட்டு வாசலில் போர்டு பிடித்து நின்ற எடப்பாடி பழனிசாமி: சசிகலாவால் களையிழந்த அதிமுக!


சேலம் மாநகரத்தைப் பொறுத்தவரையில் எட்டு இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த சூழலில் சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதியான நீட்தேர்வு ரத்து என்னாச்சு என்றும் பொதுமக்களுக்கு விடிவு தருவதாகக் கூறியது என்னாச்சு, விலைவாசி உயர்வு கட்டுக்கடங்காமல் செல்கிறது என குற்றம்சாட்டி பதாகைகளை ஏந்தி நின்றனர்.

3 மாதங்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு நூறுக்குக் கீழ் வந்தது: சேலம் மக்கள் நிம்மதி பெருமூச்சு!
குறிப்பாக மாதந்தோறும் மின்கட்டணத்தைக் கணக்கிடவேண்டும், மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற கடனை ரத்து செய்ய வேண்டும், குடும்பப் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட சட்டமன்ற தேர்தலில் திமுக அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின் வழியாக வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சூரமங்கலம் பகுதி கழக நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர்.

இதற்கிடையே மாநிலம் முழுவதும் அதிமுக தலைமை எடுத்துள்ள இந்த போராட்டத்திற்குக் கட்சியினர் மத்தியிலே அதிருப்தி கிளம்பியுள்ளதாம். அதிலும் சசிகலா தரப்பிலிருந்து இந்த போராட்டம் அவசியமற்றது என்ற கருத்து அதிமுகவினரிடம் பரப்பப்பட்டுள்ளதாம். இதன் காரணமாக ஏராளமான அதிமுகவினர் போராட்டத்தைப் புறக்கணித்துள்ளனர் எனத் தகவல்கள் கூறுகின்றன.

அடுத்த செய்தி