ஆப்நகரம்

சேலம் கொரோனா மருத்துவ பணியாளர்களுக்கு சம்பளமே வரல: சரிசெய்வாரா முதல்வர் ஸ்டாலின்?

சேலம் மாநகராட்சியில் கடந்த 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து மாநகராட்சி மருத்துவ பணியாளர்கள் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 9 May 2021, 1:46 pm
சேலம் மாநகராட்சி பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட ஆரம்பச் சுகாதார நிலையங்கள் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
Samayam Tamil சேலம் கொரோனா மருத்துவ பணியாளர்களுக்கு சம்பளமே வரல: சரிசெய்வாரா முதல்வர் ஸ்டாலின்?


இந்த சூழலில் மருத்துவ பணியாளர்களுக்குக் கடந்த 5 மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பணியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் 50க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் சேலம் மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர்.

இந்த போராட்டம் குறித்து மருத்துவ பணியாளர்கள் கூறுகையில், “சேலம் மாநகராட்சியில் கொரோனா காலத்திலும் இடைவிடாது பணியாற்றி வருகிறோம். நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு இதுவரை ஐந்து மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லை.

எடப்பாடி பழனிசாமியால் சேலம் இழந்த பெருமை... ஈடு செய்த இறையன்பு!

இங்குப் பெரும்பாலானோர் பெண்கள். சம்பளமில்லாமல் குடும்பத்தை நடத்துவது மிகவும் சிரமமாக உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து நிலுவையிலுள்ள சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரும் தொற்று காலத்திலும் விடுமுறை எடுக்காமல் தொடர் பணியாற்றி வரும் எங்களைச் சங்கடப்படுத்தாமல் எங்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாக உள்ள சம்பளப் பணத்தைத் தயவு செய்து அரசு விடுவிக்க வேண்டும்” என்றனர்.

அரசு தர வேண்டிய 5 மாத சம்பளப் பாக்கியைக் கேட்டு 50க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் கூட்டாக மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தை முற்றுகை இட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி