ஆப்நகரம்

மனைவி பேசிய போன்: குழந்தைகளை கொன்று கணவர் தற்கொலை, சேலத்தில் கொடூரம்!

சங்ககிரி அருகே மனைவியின் கள்ளக்காதலால் விரக்தியடைந்த கணவன் தனது இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட இச்சம்பவம் குறித்து சங்ககிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Samayam Tamil 27 Sep 2021, 2:58 pm
திண்டுக்கல் மாவட்டம் மங்கலப்பட்டி பகுதியைச்சேர்ந்த முருகன். வயது 33. சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே செயல்பட்டு வரும் ஸ்ரீவாரி தாபா ஓட்டலில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.
Samayam Tamil மனைவி பேசிய போன்: குழந்தைகளை கொன்று கணவர் தற்கொலை, சேலத்தில் கொடூரம்!


இவர் தாபாவிற்கு அருகிலேயே உள்ள பணியாளர்கள் குடியிருப்பில் மனைவி முருகேஸ்வரி(27), மகன் சீனிவாசன்(9), மகள் கிருஷ்ணபிரியா(5) ஆகியோருடன் குடியிருந்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு பணியின் போது முருகனின் காலில் சுடுநீர் பட்டதால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்துள்ளார்.

அப்போது மனைவி முருகேஸ்வரி சந்தேகபடும் வகையில் அடிக்கடி மற்றொருவரிடம் செல்போனில் பேசி வந்ததாகவும் இதனை முருகன் பலமுறை கண்டித்தும் மனைவி அதே நிலையை தொடர்ந்ததால் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் முருகன் தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு மனைவியின் செல்போனையும் எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.


அதைத் தொடர்ந்து ஒரு வீடியோ ஒன்றை முருகன் பதிவு செய்திருந்தார். அதில், “இரண்டு குழந்தைகளும் இறந்த நிலையில் வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் அதில், இதற்கு தானே ஆசைப்பட்டீங்க, எங்களை கொல்லனும்னு முடிவு பண்ணிட்டீங்க, கொன்னுட்டீங்க... இந்தா பார்த்துக்கோங்க” என கூறியபடி செல்கிறது.

பதற வைக்கும் இந்த வீடியோவை தனது உறவினர்கள் மத்தியில் முருகன் பகிர்ந்துள்ளார். தொடர்ந்து அவர் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

'யாரு ஃபோன்லனு' கேட்ட கணவனை கத்தியால் குத்திய 'காதல்' மனைவி... மாமியாருக்கும் விழுந்தது வெட்டு!
இதுகுறித்து மனைவி மற்றும் அவரது உறவினர்கள் சங்ககிரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் சங்ககிரி RTO ஆபீஸ் எதிரில் PRM திருமண மண்டபத்தின் பின்புறமுள்ள மாந்தோப்பில் உள்ள முருகன் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளும் தூக்கிட்டபடி சடலமாக மீட்கப்பட்டனர்.

பிரேதங்களை பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக கணவர் குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி