ஆப்நகரம்

இது என்னடா எடப்பாடிக்கு வந்த புது சோதனை.. சேலத்தில் கொந்தளித்த ர.ரக்கள்!

அதிமுக பொதுச்செயலாளரை தேர்வு செய்ய ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து பழனிசாமிக்கு எதிராக அவரது சொந்த மாவட்டமான சேலத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 14 Aug 2022, 6:16 pm
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையே அதிகாரப் போர் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இதனிடையே, சென்னையில் கடந்த மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதோடு, ஓபிஎஸ் மற்றும் அவருடன் நெருக்கமாக உள்ள வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட பலரை கட்சியில் இருந்து நீக்கம் செய்தனர்.
Samayam Tamil edappadi palanisamy
சேலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்


அதன் பின்னர் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசனை ஏற்கக்கோரி வங்கிகளுக்கு கடிதம், அதிமுக எம்.பியாக ஓ.பி.ரவிந்தரநாத்தை ஏற்க வேண்டாம் என நாடாளுமன்ற சபாநாயகருக்கு கடிதம், கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமையாக கருத தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் என எடப்பாடி பழனிசாமி ஒருபுறம் கடிதங்களை அனுப்பிக்கொண்டிருக்க, பதிலுக்கு ஓ.பி.எஸ் தரப்பிலும் கடிதங்கள் அனுப்பட்டன.

இதனிடையே, கட்சியின் அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்க நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட, அவருக்கு எதிராகவே நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் ஓ.பன்னீர்செல்வம். பின்னர், அந்த விவகாரம் அவருக்கு எதிராக திரும்பியதால் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரும் நிலை ஏற்பட்டது. இது ஒருபுறம் நடக்க இருதரப்பினரும் மாறி மாறி ஆலோசனை கூட்டத்தையும் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சேலம் மாநகர் முழுவதும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்க ஆலோசனை கூட்டத்திற்கு கலந்து கொள்ளும்படி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் “எம்ஜிஆர் அவர்கள் அதிமுக கட்சி தொடங்கிய 1972 ஆம் ஆண்டு கட்சியின் சட்ட விதிகளை உருவாக்கி அதில் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்கி உள்ளார். இந்த உரிமையை மீட்டெடுத்து புதிய பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க இதய தெய்வம் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தமான கழகத்தின் மூத்த உடன்பிறப்புகளும் கழகத்தின் முன்னோடிகளும் கழக உறுப்பினர்களும் தொண்டர்களும் இதய தெய்வம் புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மா அவர்களின் உண்மையான விசுவாசிகளும் தொண்டர்களும் தலைவர் எம்ஜிஆர் மன்ற உறுப்பினர்களும் ஜெ.ஜெயலலிதா பேரவையின் கழகத்தின் உறுப்பினர்களும் தொண்டர்களும் கழகத்தின் சட்ட விதிப்படி புதிய பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்” என்று எழுதப்பட்டுள்ளது

சேலம் மாநகர் மாவட்ட அதிமுக உறுப்பினர்களின் பெயரில் அச்சிடப்பட்டுள்ளது இந்த போஸ்டரில் எம்ஜிஆர், ஜானகி அம்மாள், ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில் அவருக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி