ஆப்நகரம்

இதனை தடுப்பவர் வென்றதாக சரித்திரம் இல்லை... ஸ்டாலினை சாடிய முதல்வர்!

கொரோனா, புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொங்கல் பரிசு தருவதை விமர்சிப்பது சரியல்ல என்றும், ஏழை மக்களுக்கு கொடுப்பதைத் தடுப்பவர் வென்றதாக சரித்திரம் கிடையாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.

Samayam Tamil 20 Dec 2020, 7:23 am
சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் நேற்று தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரிய சோரகை, ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, வனவாசி, சவுரியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
Samayam Tamil முதல்வர் எடப்பாடி பழனிசாமி
சேலம் ்மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்யும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி


பெரிய சோரகை, இருப்பாளி, எட்டிகுட்டை மேடு உள்ளிட்ட ஐந்து இடங்களில் 'அம்மா மினி கிளினிக்'கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

எட்டிகுட்டை மேடு பகுதியில் நேற்றிரவு அம்மா மினி கிளினிக் திறந்து வைத்தபின் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியது:

பொங்கல் பரிசு உயர்வு ஏன்? எடப்பாடி பழனிசாமி பதில்!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் இருந்து சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் வழியாக ஓமலூர் வரை அமைய உள்ள நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்.

மேட்டூர் அணை உபரி நீரை கொண்டு வறண்ட 100 ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்டம் வரும் பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவடைந்து ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படும். காவிரி நதியின் குறுக்கே 375 கோடி ரூபாய் மதிப்பில் ஆதவன் குமாரமங்கலம் பகுதியில் கதவணை அமைக்கும் பணியும், கரூர் நஞ்சை புகளூர் பகுதியில் 406 கோடி ரூபாய் மதிப்பில் கதவணை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு அரசு பள்ளிகளை சேர்ந்த ஆறு மாணவர்கள் மட்டுமே மருத்துவ கல்வியில் சேர முடிந்தது. தமிழக அரசு கொண்டு வந்த 7.5 சதவீத இட ஒதுக்கீடு காரணமாக நடப்பாண்டில் 313 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேர்ந்துள்ளனர்.

தேர்தல் பிரச்சாரம்: முதல்வரின் அவசரத்துக்கு காரணம் என்ன?

கடந்த ஆண்டு 6 பேர் மட்டுமே மாநில அளவில் மருத்துவக் கல்வியில் சேர்ந்த நிலையில் நடப்பாண்டில் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் 5 பேர் மருத்துவக் கல்வியில் சேர்ந்துள்ளனர் இதெல்லாம் வரலாற்று சாதனை.

தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக அரிசி அட்டை வைத்திருக்கும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 2,500 ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் பொங்கல் பரிசு தருவதாக அறிவிக்கப்பட்டது. 'பொங்கல் பரிசு அறிவித்திருப்பது சுயநலம்'என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

கொரோனா, புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொங்கல் பரிசு கொடுப்பதை தவறு என்று கூறுவது சரியல்ல. ஏழை மக்களுக்கு கொடுப்பதை தடுப்பவர்கள் எந்த காலத்திலும் வென்றதாக சரித்திரம் கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அடுத்த செய்தி