ஆப்நகரம்

குண்டுவெடிப்புக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இலங்கையர்கள் கைது

குண்டுவெடிப்புக்கு பிறகு படகு வழியாக ஆஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்ற 41 இலங்கையர்களை இலங்கை கடற்படை அதிகாரிகள் கைது செய்தனர்.

Samayam Tamil 27 May 2019, 7:28 pm
இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மீன்பிடி படகு வழியாக செல்ல முயன்ற 41 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அந்நாட்டின் தெற்கு கடல்பகுதியில் சந்தேகப்படக்கூடிய வகையில் பயணித்துக் கொண்டிருந்த படகை இடைமறித்ததில், அவர்களின் ஆஸ்திரேலியாவை நோக்கிய பயணம் அம்பலமாகியுள்ளது.
Samayam Tamil ஆஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்ற இலங்கையர்கள் கைது
ஆஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்ற இலங்கையர்கள் கைது


இலங்கையின் தென்முனையில் உள்ள டோன்ட்ரா கலங்கரை விளக்கத்திலிருந்து 715 நாட்டிகல் மைல் தூரத்தில் பிடிபட்ட அப்படகில், 35 ஆண்களும் 6 பெண்களும் இருந்துள்ளனர். அதில் 7 குழந்தைகள், மற்ற அனைவரும் 18 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இலங்கையில் நடந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு துணைப்புரிந்தவர்கள் கடல் வழியாக வெளியேறுவதை தடுக்க கடற்படை தொடர்ந்து விழிப்புடன் இருப்பதால், இதுபோன்ற சட்டவிரோத முயற்சிகள் இறுதியாக சிறையில் தான் தள்ளும் என இலங்கை கடற்படை எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், சட்டவிரோத குடியேற்றம் தொடர்பான முயற்சிகளை முளையிலேயே கிள்ளி எறிவதற்கான வலுவான கண்காணிப்புகள் கடற்படையிடம் உள்ளதாகவும் எச்சரிக்கைப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் ஆஸ்திரேலியா கடல் பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக ‘ஆப்ரேஷன் ரிசால்வ்’ என்ற பெயரில் பெரும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. ஆட்கடத்தல்காரர்கள் (ஆஸ்திரேலிய) எல்லையை பரிசோதிக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடும் என்ற உளவுத்தகவலின் காரணமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதே போல், கடந்த மே 12ம் தேதி இலங்கையின் மட்டக்களப்பு பகுதியிலிருந்து 15க்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்திரேலியா செல்ல முயன்றிருந்தனர்.

அந்த வகையில், 2019ம் ஆண்டில் வெளிநாடுகளுக்கு படகு வழியாக சட்டவிரோதமாக செல்ல முயன்ற 71 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியவை நோக்கிய இவ்வாறான படகுப்பயணங்களில் இதுவரை 1000த்திற்கும் மேற்பட்ட அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் உயிரிழந்திருக்கின்றனர்.

அடுத்த செய்தி