ஆப்நகரம்

சரக்கு கப்பலில் மீண்டும் தீ... இலங்கை கடற்பரப்பில் தொடரும் துயரம்

இலங்கை கடல் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள சரக்கு கப்பலில் இன்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய- இலங்கை கூட்டு கடற்படையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர தீவிரமாக போராடி வருகின்றனர்.

Samayam Tamil 8 Sep 2020, 12:45 am
MT New Diamond கப்பலில் பரவிய தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த கப்பலில் மீண்டும் தீ பரவியுள்ளது. இதனை இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
Samayam Tamil ship fire


கப்பல் தற்போதுள்ள பகுதியில் அதிக காற்றுடனான வானிலை நிலவி வருவதால் மீண்டும் தீ பரவியதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கப்பலில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதிலும், கப்பலுக்குள் தொடர்ந்து தீயினால் ஏற்பட்ட உஷ்ணம் மற்றும் தீ பிழம்புகள் காணப்படுகின்றன. இதுவே மீண்டும் தீ விபத்து ஏற்பட காரணம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படை, இந்திய கடற்படை, இந்திய கடலோர பாதுகாப்புப்படை, இலங்கை விமானப்படை உள்ளிட்ட கூட்டு படையினர் கப்பலில் ஏற்பட்ட தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளை கூட்டாக மேற்கொண்டு வருகின்றனர். தீ மீண்டும் பரவாத வகையில், ரசாயன தெளிப்பான்கள் மற்றும் நீர் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

சரக்கு கப்பலில் பயங்கர தீ... இலங்கை கடல் எல்லையில் நேர்ந்த துயரம்

MT New Diamond என்ற சரக்கு கப்பல் குவைத்தின் மினா அல் அஹமத் துறைமுகத்திலிருந்து இந்தியாவின் ஒடிசா துறைமுகத்தை நோக்கி பயணித்து கொண்டிருந்தது. கப்பல் இலங்கை கடல் எல்லையில் பயணித்துக் கொண்டிருந்தபோது கடந்த 3 ஆம் தேதி, அதில் தீ விபத்து ஏற்பட்டது.


இந்த விபத்தில் கப்பலில் பணிபுரிந்த ஒருவர் உயிரிழந்தார். 22 பேர் கப்பலிலிருந்து மீட்கப்பட்டனர். கப்பலில் 2.7 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யும், சுமார் 1,700 மெட்ரிக் டன் டீசலும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி