ஆப்நகரம்

மீனவர்கள் விவகாரம்: தமிழக முதல்வருடன் டக்ளஸ் தேவானந்தா விரைவில் சந்திப்பு!

மீனவர்கள் அத்துமீறல் விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வருடன், இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விரைவில் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்

Samayam Tamil 28 Sep 2020, 8:39 pm
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்வதும், அதேபோல் இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இந்திய கடற்படையினர் அவர்களை கைது செய்வதும், மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய, மாநில அரசுகள் மற்றும் இலங்கை அரசின் தலையீட்டால் அவர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.எனினும் மீனவர்களின் பிரச்னைக்கு இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை.
Samayam Tamil டக்ளஸ் தேவானந்தா
டக்ளஸ் தேவானந்தா


இந்த நிலையில், மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பான பிரச்சினைக்கு சமரச தீர்வை காண்பதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் தமிழ்நாட்டு முதலமைச்சருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே இடையே நடைபெற்ற காணொளி காட்சி வாயிலான கலந்துரையாடலின் போது, இதற்கு பிரதமர் மோடி இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே இடையேயான பேச்சுவார்த்தை தொடர்பான செய்தியாளர்கள் விளக்கக் கூட்டத்தின் போது, மீனவர்களின் அத்துமீறல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

நண்பர் ராஜபக்சேவுடன் பேசியது மகிழ்ச்சி: மோடி போட்ட தமிழ் ட்வீட்!

நீண்டகாலமான நிலவிவரும் மீனவர்களின் அத்துமீறல் பிரச்சினைக்கு சுமுகமாக தீர்ப்பதற்கு இரு தரப்பினரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் இந்திய பிரதமரின் இந்த தீர்மானம் தீர்வை எட்டக்கூடியதாக இருக்கும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அப்போது நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய மீனவர்களின் அத்துமீறல் காரணமாக வடக்கு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதேபோன்று இந்திய மீனவர்களுக்கும் பெரிய பாதிப்பு உண்டு. கூட்டு குழுவின் மூலம் இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அதேபோல், முன்னாள் அமைச்சர் காமினி திஸாநாயக்க இந்த பேச்சுவார்த்தைக்காக பல வருடங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு சென்றிருந்ததை சுட்டிக்காட்டிய அமைச்சரவை செய்தித் தொடர்பாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல்ல, பிரச்சினையை தீர்ப்பதற்காக இரு நாட்டு அமைச்சர்கள் மட்டத்தில் குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழு இறுதியாக கடந்த ஜனவரி மாதம் சந்தித்தது. அதற்கு பின்னர், கொரோனாவால் இக்குழுவின் கூட்டம் தள்ளி போய்விட்டது. இதனை மீண்டும் ஆரம்பிப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இருநாட்டு பிரதமர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் போது இந்திய மீனர்வர்களின் அத்துமீறல் குறித்த காணொளி காட்சிகளும் இந்திய பிரதமரிடம் முன்வைக்கப்பட்டது. இதனை கவனத்தில் கொண்டுள்ள பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு அப்பாலான இந்திய அரசாங்கத்திற்கு உட்பட்ட கரையோர பாதுகாப்பு பிரிவினர் மூலம் இதற்கு நடவடிக்கை மேற்கொள்ள கவனம் செலுத்தியுள்ளார். அதேபோல், காரையோர பாதுகாப்பு பிரிவினர் மூலம் இதனை தடுப்பதில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே கவனம் செலுத்தியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி