ஆப்நகரம்

மகிந்த ராஜபக்சேவை சந்தித்த அஜித் தோவல்: காரணம் இதுதான்!

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சந்தித்தார்.

Samayam Tamil 28 Nov 2020, 2:45 pm
கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக இந்திய பெருங்கடல் நாடுகளான இந்தியா, இலங்கை, மாலத்தீவு இடையே ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கடந்த முறை, 2014ஆம் ஆண்டு டெல்லியில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
Samayam Tamil srilanka


இந்நிலையில், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நேற்று (நவம்பர் 27) இலங்கை தலைநகர் கொழும்புவில் தொடங்கியது. இந்தியா சார்பில் பங்கேற்பதற்காக, பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று கொழும்பு சென்றார். அவருக்கு இலங்கை ராணுவ தளபதி சில்வா ஷாவேந்திரா வரவேற்பு அளித்தார்.

பின்னர் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில், இந்திய குழுவுக்கு அஜித் தோவலும், மாலத்தீவு குழுவுக்கு அதன் ராணுவ அமைச்சர் மரிய தீதியும் தலைமை தாங்கினர். வங்காளதேசம், மொரீஷியஸ், சிஷெல்ஸ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள், பார்வையாளர்களாக பங்கேற்றனர்.

கடல்சார் பாதுகாப்பு, கடல்சார் சுற்றுச்சூழல், தகவல் பகிர்வு மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் கடற்கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், ஆயுத கடத்தல் ஆகியவற்றை தடுப்பது தொடர்பாக கூட்டாக நடவடிக்கை எடுப்பது பற்றி இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டது. இன்றும் இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுகிறது.

இதற்கிடையே, நேற்று மகிந்த ராஜபக்சேவை அஜித் தோவல் சந்தித்தார். மோடியின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். செப்டம்பர் மாதம், மோடி-ராஜபக்சே இடையே காணொலி காட்சியில் நடந்த உச்சி மாநாட்டின் வெற்றி குறித்து நினைவு கூர்ந்தார். பின்னர், இலங்கை பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னேவையும் அஜித் தோவல் சந்தித்தார். இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த இருவரும் முடிவு செய்தனர்.

அடுத்த செய்தி