ஆப்நகரம்

பயங்கரவாதத்தின் மிச்சங்கள்: விடுதலைப் புலிகளை சாடிய ராஜபக்சே - இலங்கை மேல்முறையிடு!

விடுதலைப் புலிகள் மீதான இங்கிலாந்தின் தடை தவறானது என சிறப்பு ஆணையம் அளித்த தீர்ப்பை எதிர்த்து இலங்கை அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது

Samayam Tamil 22 Oct 2020, 9:28 pm
இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர்ந்து வந்த நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பு எவ்விதமான பயங்கரவாத செயல்பாடுகளிலும் ஈடுபடவில்லை எனச்சுட்டிக்காட்டி தடையினை நீக்குமாறு பிரிட்டிஷ் உள்துறை அமைச்சகத்திடம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கோரியிருந்தது. இதனை உள்துறை அமைச்சகம் நிராகரித்த நிலையில், Proscribed Organisations Appeal Commission என்ற தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான சிறப்பு ஆணையத்திடம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சட்டநடவடிக்கையினை முன்னெடுத்திருந்தது.
Samayam Tamil மகிந்த ராஜபக்சே
மகிந்த ராஜபக்சே


அந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்பளித்த சிறப்பு ஆணையம் விடுதலைப் புலிகள் மீதான இங்கிலாந்தின் தடை தவறானது என தெரிவித்துள்ளது. இதன் மூலம், இங்கிலாந்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை விரைவில் நீங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், இந்த தீர்ப்பின் அடிப்படையில் இங்கிலாந்து அரசும், மனுதாரரான நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பு, சிறப்பு வழக்கறிஞர் ஆகியோர் தரப்பில் எழுத்துப்பூர்வ மனுக்கள் 28 நாட்களுக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதன் அடிப்படையில் இந்த விவகாரத்தில் மேல்முறையீட்டு ஆணையம் தீர்ப்பளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அரசின் முடிவை பொறுத்தே தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குகிறது!

இந்த நிலையில், விடுதலைப் புலிகள் மீதான இங்கிலாந்தின் தடை தவறானது என சிறப்பு ஆணையம் அளித்த தீர்ப்பை எதிர்த்து இலங்கை அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “Proscribed Organisations Appeal Commission என்ற தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான சிறப்பு ஆணையத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் இலங்கை அரசு மனுதாரராக இல்லை. ஆனாலும், தேவையான ஆவணங்களை வழங்கி வந்தது. இந்த விவகாரத்தில் மேற்கொண்டு விசாரணை நடத்த வாய்ப்புள்ளதால், மிகவும் நெருக்கமாக இந்த வழக்கு தொடர்ந்து கவனிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க பிரிட்டிஷ் உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்ததையும் இலங்கை அரசு சுட்டிக் காட்டியுள்ளது.


இதனிடையே, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது ட்விட்டர் பக்கத்தில், “விடுதலைப் புலிகளை வீழ்த்தி அதன் கொடூரமான பயங்கரவாத செயல்பாடுகளுக்கு இலங்கை அரசு முற்றுப்புள்ளி வைத்தது. ஆனால், விடுதலைப் புலிகளின் பயங்கரவாத மிச்சங்கள் உலகம் முழுவதும் விழிப்புடன் இருப்பது எந்தவொரு நாட்டுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல். எனவே விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரிட்டன் அரசு அப்படியே வைத்திரு்ககும் என நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி