ஆப்நகரம்

இலங்கை நாடாளுமன்றம் கலைப்புக்கு இடைக்காலத் தடை!

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு நவம்பர் 19ம் தேதி வரை இடைக்காலத்தடை

Samayam Tamil 13 Nov 2018, 6:16 pm
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கும் ஜனவரி 5ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடத்துவும் தடை விதித்து இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil Sri_Lanka-_Maithripala-Mahinda


இலங்கையில் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சிகள் கூட்டணி அமைத்தே இலங்கையில் ஆட்சி நடத்தி வந்தன. இந்தக் கூட்டணியில் பிளவு ஏற்பட, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை பிரதமராக நியமித்து அதிபர் மைத்திரி பால சிறிசேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

ஏற்கனவே பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், இலங்கையின் பிரதமர் நான் தான் எனவும், அரசியல் சாசனப்படி, ராஜபக்சே பதவியேற்றது செல்லாது என கூறி வந்தார். இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க நாடாளுமன்றத்தை அவசமாக கூட்ட அவர் வலியுறுத்தினார்.

அதிபர் சிறிசேனாவின் இந்த முடிவுக்கு சபாநாயகர் கரு. ஜெயசூரியா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்பு நடத்தவும் திட்டமிடப்பட்டது. ஏற்கனவே, 118 எம்பி.,க்கள் கையெழுத்திட்டு ராஜபக்சேவுக்கு எதிராக சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர்.

இதனிடையே, தமிழ் முற்போக்கு கூட்டணியும் ராஜபக்சேவுக்கு எதிராக திரும்பினர். அக்கட்சியில் 6 எம்பிக்கள் உள்ளனர். அவர்கள் ரணில் விக்ரமசிங்கை ஆதரிக்கப்போவதாக கூறினர். இதனால், ராஜபக்சே பிரதமராகும் முயற்சியில் தோல்வியடைச் செய்யும் என்று கூறப்படுகிறது. ராஜபக்சே பிரதமராக முடியாத நிலையில், இலங்கை நாடாளுமன்றம் நள்ளிரவு முதல் கலைக்கப்படுவதாக அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்தார். ஜனவரி 5 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் எனவும், ஜனவரி 17 ஆம் தேதி புதிய நாடாளுமன்றம் பதவியேற்கும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, சிறிசேனாவின் சுதந்திர கட்சியில் இருந்து ராஜபக்சே விலகியுள்ளார். அதற்கு பதிலாகஇலங்கையின் பொது ஜன முன்னனி கட்சியில் இணைந்துள்ளார். ராஜபக்சேவுடன் அவருடைய மகன் நமல் ராஜபக்சேயும், அவர்களது ஆதரவாளர்களும் கட்சி உறுப்பினர்களும், பொது ஜன கட்சிக்கு மாறினர்.

இதனிடையே இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை செல்லாது என்று அறிவிக்கக்கோரி ரணில் விக்ரமிங்க சிங் உட்பட இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சியினர் இலங்கை உச்சநீதிமன்றத்தில் 17 வழக்குகள் தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இன்று மாலை தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவித்திருந்தது.

இந்நிலையில், சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைத்தற்கு நவம்பர் 19ம் தேதி வரை இடைக்காலத்தடை விதித்து இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஜனவரி 5ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடத்தவும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ராஜபக்சேவின் கட்சி மாற்றத்தினாலும், உச்சநீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவாலும் இலங்கை அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி