ஆப்நகரம்

எப்படியாவது எங்களை ஊருக்கு அனுப்புங்க... அரசிடம் கர்ப்பிணி கோரிக்கை

தனது தாயாருடன் 5000 ரூபாய்க்கு வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வரும் இவர், தற்போது போதிய நிதி வசதியில்லாமல் கஷ்டப்படுகிறார்

Samayam Tamil 2 Jul 2020, 9:16 pm
இலங்கையைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் தன் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்ல உதவும்படி தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
Samayam Tamil Secretariat


ஸ்ரீலங்கா யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் சந்திர மோகனா, பாஸ்கரன் தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்காக கடந்த டிசம்பர் மாதம் அவரது தாயார் காந்திமதியுடன் கோவைக்கு வந்துள்ளனர்.

இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், தற்போது ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கிறார். கொரோனா பிரச்சினை காரணமாக விமானம் இல்லாததால், ஸ்ரீலங்கா செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாக தெரிவித்தார்.

இவர் , கோவை புலியகுளம் பகுதியில் தனது தாயாருடன் 5000 ரூபாய்க்கு வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருவதாகவும், தற்போது போதிய நிதி வசதியில்லாததால் கஷ்டப்படுவதை பார்த்து, அருகிலிருப்பவர்கள் உதவி செய்து வருவதாகவும் கூறினார்.

மேலும் அவரது கணவர் கடந்த மார்ச் மாதம் ஊருக்கு திரும்பிவிட்டார் . அதன் பிறகு, விமானப் போக்குவரத்து நிறுத்திவிஅக்கப்பட்டதால் இவர்களிருவரும் கோவையிலேயே இருக்க வேண்டியதாகி விட்டது. ஆனால், தனக்கும், தனது அம்மாவிற்கும் அடுத்த மாதத்தோடு விசா முடிய இருக்கும் நிலையில், நாட்டுக்குச் செல்ல முயற்சி செய்தால், எட்டு மாதமான கர்ப்பிணி பெண்களுக்கு விமானத்தில் பயணம் செய்ய அனுமதியில்லை என்பதும் சிக்கலாக இருக்கிறது.

எனவே தங்களை எப்படியாவது சொந்த நாட்டுக்கு அனுப்ப தமிழக அரசு உதவக்கோரி சந்திர மோகனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அடுத்த செய்தி