ஆப்நகரம்

இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குகிறது!

விடுதலைப் புலிகள் மீதான இங்கிலாந்தின் தடை தவறானது என சிறப்பு ஆணையம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது

Samayam Tamil 21 Oct 2020, 5:59 pm
இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நாடுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தடை விதித்திருந்தன. விடுதலைப் புலிகள் மீது முதன்முதலில் தடை விதித்தது இந்தியாதான்.இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால் அதை பின்பற்றி அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளும் தடைகளை விதித்தன.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


உலகில் எந்த நாடும் விடுதலைப் புலிகளால் நேரடியாக பாதிக்கப்பட்டு அந்த இயக்கத்தை தடை செய்யவில்லை. மாறாக, விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு செய்து வந்த பிரசாரங்களினால் உலக நாடுகள் அந்த அமைப்புக்கு தடை விதித்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடை செல்லாது என்று ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தீர்ப்பளித்தது. ஆனால், இங்கிலாந்தில் மட்டும் இந்த தடை தொடர்ந்து வந்தது. இருப்பினும், விடுதலைப் புலிகள் அமைப்பு எவ்விதமான பயங்கரவாத செயல்பாடுகளிலும் ஈடுபடவில்லை எனச்சுட்டிக்காட்டி தடையினை நீக்குமாறு பிரிட்டிஷ் உள்துறை அமைச்சகத்திடம் 2008ஆம் ஆண்டில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கோரியிருந்தது.

ரயில் சேவைகளில் மாற்றம்: இலங்கை ரயில்வேத்துறை அதிரடி அறிவிப்பு!

இதனை உள்துறை அமைச்சகம் நிராகரித்த நிலையில், தடையை நீக்கும் செயற்பாடாக Proscribed Organisations Appeal Commission என்ற தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான சிறப்பு ஆணையத்திடம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சட்டநடவடிக்கையினை முன்னெடுத்திருந்தது. விடுதலைப் புலிகள் மீதான தடை என்பது தமிழர்களின் பேச்சு சுதந்திரத்துக்கும், கருத்து சுதந்திரத்துக்கும் இடையூறாக இருக்கிறது. விடுதலை புலிகள் அமைப்பு எவ்வித பயங்கரவாத செயல்களிலும் ஈடுபடவில்லை என்று வாதிடப்பட்டது.

இந்த நிலையில், விடுதலைப் புலிகள் மீதான இங்கிலாந்தின் தடை தவறானது என அந்த மேல்முறையீட்டு வழக்கில் சிறப்பு ஆணையம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 38 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் விடுதலைப் புலிகள் மீதான தடை தவறானது என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், இங்கிலாந்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை விரைவில் நீங்கும் என தெரிகிறது. இங்கிலாந்து அரசின் முடிவை பொறுத்தே தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலைப் புலிகள் இயக்கம் நடத்தியது உரிமைப் போராட்டமே தவிர பயங்கரவாதம் அல்ல என்று உலகின் பல்வேறு நீதிமன்றங்கள் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ள நிலையில், தற்போது அளிக்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்பு மிக்க இந்தத் தீர்ப்பு இலங்கைத் தமிழர் நடத்திவரும் அறவழிப் போராட்டத்திற்கு உலகின் ஆதரவை திரட்ட இது உதவும் என கருதப்படுகிறது.

அடுத்த செய்தி