ஆப்நகரம்

சென்னையில் மாநகரப் பேருந்து மோதி 2 பெண்கள் உயிரிழப்பு ஒருவர் படுகாயம்

சென்னையில் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் மீது மாநகரப் பேருந்து மோதிய விபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Samayam Tamil 16 Jul 2019, 11:52 am
சென்னை நந்தனம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது மாநகரப் பேருந்து மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம்.

சென்னை அண்ணாசாலை அருகே நந்தனம் ஒய்எம்சிஏ மைதானம் அருகில் வழக்கம் போல் இன்றும் வாகனங்கள் சென்றுகொண்டு இருந்தன. அப்போது ஒரே இருசக்கர வாகனத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

ஒய்எம்சிஏ மைதானம் அருகே சிக்னலில் நின்றுகொண்டிருந்த நிலையில், சிக்னல் விலக்கப்பட்டதும் வாகன ஓட்டிகள் மின்னல் வேகத்தில் செல்லத் தொடங்கினர். அப்போது இரண்டு பெண்களுடன் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் அருகில் சென்ற மற்றொரு இருசக்கர வாகனத்தை முந்திசெல்ல முற்பட்டபோது விபத்து ஏற்பட்டது. இதனால் நிலைத் தடுமாறி இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் சாலையில் விழுந்தனர்.

அப்போது மேற்கு சைதாபேட்டையில் இருந்து பாரிஸ் நோக்கி சென்ற மாநகரப் பேருந்து கீழே விழுந்தவர்கள் மீது ஏறியது. இந்த விபத்தில் பவானி, நாகலட்சுமி இரண்டு பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வாகனத்தை ஓட்டி வந்த சிவா படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி