ஆப்நகரம்

நெஞ்சை உலுக்கிய விபத்து: மின்கம்பி அறுந்து விழுந்து 3 தலைமுறை பலி...

திருச்சி அருகே வயலில் வேலை செய்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் மீது மின்கம்பி அறுந்து விழுந்ததால் மின்சாரம் பாய்ந்து மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

Samayam Tamil 22 Dec 2019, 8:27 pm
தமிழகத்தில் இன்றைய நாளில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இழப்பாகவே இந்த சம்பவம் அறியப்படுகிறது. மூன்று தலைமுறைகளை இழந்து சோகத்தில் ஆழ்ந்துள்ளது திருச்சி ஒப்பாயி குடும்பம்.
Samayam Tamil நெஞ்சை உலுக்கிய விபத்து மின்கம்பி அறுந்து விழுந்து 3 தலைமுறை பலி


திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தைச் சேந்தவர் ஒப்பாயி (68). இவருக்கு சொந்தமாக 10 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் உள்ளது. அதில் நெல் பயிரிடப்பட்டுள்ளதால் அதற்கு உரமிடுவதற்காக அவருடைய மகன் ராமமூர்த்தி (41), ராமமூர்த்தியின் மகன் குணசேகரன் (21) ஆகிய இருவரும் வயலில் இறங்கி வேலை பார்த்து வந்தனர்.

அப்போது ஒப்பாயி வரப்பில் நின்று கொண்டிருந்ததாக தெரிகிறது. நிலத்தில் கணுக்கால் அளவுக்கு தண்ணீர் இருந்துள்ளது. இந்த நிலையில் மேலே இருந்த மின்கம்பி உயர் மின் அழுத்தம் காரணமாக அறுந்து வயலுக்குள் விழுந்தது.

இதனால் வயல் முழுவதும் மின் கசிவு ஏற்பட்டு ராமமூர்த்தி, குணசேகரன் இருவர் மீது மின்சாரம் பாய்ந்து துடித்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஒப்பாயி, இருவரையும் காப்பாற்றும் நோக்கில் வயலுக்குள் இறங்கினார்.

இந்திய இஸ்லாமியர்கள் மற்ற நாட்டு இஸ்லாமியர்களுக்கு ஏன் போராட வேண்டும்.? - அதிமுக அமைச்சர்

இதையடுத்து அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. சிறிது நேரம் கழித்து மூவரும் மயங்கியுள்ளனர். தகவல் அறிந்த ஒப்பாயி உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதறி அழுதனர். இதையடுத்து ஊர் மக்கள் ராம்ஜிநகர் போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் அவர்கள் இறந்து போன மூன்று பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வயலில் வேலை செய்த பாட்டி, மகன், பேரன் ஆகிய மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி