ஆப்நகரம்

300 டன் விஷ்ணு சிலையை நகர்த்த பெரும்பாடு; 3 நாளில் வெறும் 300மீ இடம்பெயர்வு!

சென்னை: பிரம்மாண்ட விஷ்ணு சிலையை பெங்களூருவிற்கு கொண்டு செல்ல தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Samayam Tamil 9 Dec 2018, 4:08 pm
கடவுளின் அருள் இல்லாமல் இந்த உலகில் எதையும் நகர்த்த முடியாது என்றே தோன்றுகிறது. அதற்கு உதாரணமாக பிரம்மாண்ட விஷ்ணு சிலை இருக்கிறது. 64 அடி உயரம், 300 டன் எடை கொண்ட மகா விஷ்ணு சிலை ஒவ்வொரு இஞ்ச், இஞ்சாக மிக மெதுவாக நகர்த்தப்பட்டு வருகிறது.
Samayam Tamil Vishnu


திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா கோரக்கோட்டை கிராமத்தில் உள்ள மலையை வெட்டி விஷ்ணுவிற்கு சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதனை 240 டயர்கள் கொண்ட நீண்ட லாரியில் மிகுந்த சிரமப்பட்டு ஏற்றினர்.

அங்கிருந்து கடந்த சில நாட்களில் 30 மீட்டர் மட்டுமே நகர்த்த முடிந்துள்ளது. குவாரி அமைந்துள்ள இடத்தில் இருந்து வெளியே கொண்டு வர மட்டும் 3 நாட்கள் ஆகியுள்ளது. அதற்குள் சில டயர்கள் வெடித்து, அவை மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சிலையை பெங்களூருவில் உள்ள கோதண்டராமசாமி டிரஸ்டிற்கு சொந்தமான கோவிலுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். இதற்காக ஒருங்கிணைப்பு அதிகாரியான திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் 50 நாட்களில் உரிய இடத்திற்கு கொண்டு சேர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளி அன்று சிலை இருக்கும் இடத்தை ஆய்வு செய்து, மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

மும்பையைச் சேர்ந்த ரேஷாம்சிங் குழுமத்தின் 30 பேர் கொண்ட குழுவினர் சிலையை எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிலை தற்போது இருக்கும் இடத்தில் இருந்து 500 மீ நகர்ந்து, தெல்லூர் - தேசூர் சாலைக்கு சென்று விட்டால், அதன் பிறகு சீரான வேகத்தில் கொண்டு சென்று விடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி