ஆப்நகரம்

தமிழகத்தில் புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இன்று மட்டும் 31 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 14 Apr 2020, 7:19 pm
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1024ஆக அதிகரித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று தொடர்பான விவரங்களை தமிழக சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் தினசரி வெளியிட்டு வருகிறார்.
Samayam Tamil தமிழகத்தில் புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு


அவ்வகையில் இன்று (ஏப்ரல் 14) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பீலா ராஜேஷ், “கொரோனாவிலிருந்து 81 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 28,711 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும், 135 பேர் அரசு கண்காணிப்பில் இருக்கின்றனர். 68,619 பேர் 28 நாள் கண்காணிப்பை முடித்துள்ளனர். 19,255 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 16 அரசு பரிசோதனை மையங்களும், 9 தனியார் பரிசோதனை மையங்களும் இயங்குகின்றன.

தமிழகத்தில் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31. திண்டுக்கலில் மட்டும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1204ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்ட 31 பேரில் 21 பேருக்கு ஒரே சோர்ஸ் மூலம் பரவியுள்ளது. ஒருவர் வெளிமாநிலத்திற்கு பயணித்தவர். 9 பேருக்கு அவர்களுக்கு தொடர்புடையோரிடமிருந்து பரவியுள்ளது.

இந்த 31 பேரில் 15 ஆண்களும் 16 பெண்களும் அடங்குவர். சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று 69 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. இவர்களில் யாருக்குமே கொரோனா தொற்று இல்லை. பாதிக்கப்பட்ட 31 பேரில் மாவட்ட வாரியாக திண்டுக்கலில் 9 பேர், சென்னையில் 5 பேர், தஞ்சாவூரில் 4 பேர், தென்காசியில் 3 பேர், மதுரையில் 2 பேர், நாகப்பட்டிணத்தில் 2 பேர், ராமநாதபுரத்தில் 2 பேர், கடலூரில் ஒருவர், சிவகங்கையில் ஒருவர், சேலத்தில் ஒருவர், கன்னியாகுமரியில் ஒருவர் அடங்குவர்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி