ஆப்நகரம்

விளக்கமளித்தும் விடாத அரசு... வரதராஜன் மீது 4 வழக்குகள்

கொரோனா குறித்து தவறான தகவலை வெளியிட்டதற்காக செய்தி வாசிப்பாளர் வரதராஜன் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Samayam Tamil 8 Jun 2020, 10:52 pm
சென்னை: நடிகரும் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருமான வரதராஜன் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Samayam Tamil கோப்புப்படம்


கொரோனா சிகிச்சைக்கு போதுமான படுக்கை வசதிகள் மருத்துவமனைகளில் இல்லை என்றும் அதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வீடியோ வெளியிட்டார். இது சமூக வலைதளங்களில் பெருமளவில் பரவி பொதுத்தளத்தில் பேசுபொருளாக மாறியது.

இதனைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வரதராஜன் மீது தொற்றுநோய்கள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

இதனைத் தொடர்ந்து, நான் எங்கள் நண்பர்கள் அடங்கிய ஒரு குழுவில் தனிச்செய்தியாக இதை அனுப்பினேன். வேறு யாரோ பரப்பி விட்டார்கள். அரசு கடுமையாகப் போராடி வருகிறது. நாம் அவற்றுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று விளக்கமளித்து மற்றொரு வீடியோவும் வெளியிட்டார் வரதராஜன்.


இந்நிலையில், இவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொற்று நோய்கள் தடுப்புச் சட்டம், பேரிடர் மேலாண்மைச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி