ஆப்நகரம்

Ramnad: சரிந்து விழுந்த ஜெபக்கூடம்... 7 வயது சிறுவன் பலி

இராமநாதபுரத்தில் ஜெபக்கூடம் ஒன்றின் சுவர் இடிந்து விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

Samayam Tamil 14 May 2020, 9:47 am
இராமநாதபுரத்தில் ஜெபக்கூடத்துச் சுவர் இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுவன் உயிரிழந்ததோடு, மேலும் 2பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil இடிந்து விழுந்த சுவரின் பகுதி


இராமநாதபுரம் எம்.எஸ்.கே. நகர் பகுதியில், அப்போஸ்தல தீர்க்கதரிசன ஜெபக்கூடம் என்ற பெயரில் ஜெபக்கூடம் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை அதன் அருகே அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக ஜெபக்கூடத்தின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஜெப்ரி ரோகித் என்ற 7 வயது சிறுவன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இராமநாதபுரம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார், இவர் தனியார் மருத்துவ ஆய்வக பரிசோதகராக உள்ளார். இவரது மனைவி சரண்யா. இத்தம்பதியருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர்தான் ஜெஃப்ரி ரோஹித்.

மேலும், மற்றொரு சிறுவன் மணிக்குமார் என்ற 10 வயது சிறுவன், பிரிசில்லா என்ற 31 வயது பெண்மணி ஆகியோர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: மறுபரிசீலனை செய்ய ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள்!

கடந்த சில நாட்களாக இந்தப் பகுதியில் கோடை மழை பெய்து வரும் நிலையில், மழையின் காரணமாக இந்த சுவர் சேதம் அடைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து பி-1 போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெபக்கூடத்தின் கட்டிடச் சுவர் இடிந்து விழுந்து 7 வயது சிறுவன் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதே நிலையில், அப்பகுதியில் வேறு ஏதேனும் கட்டிடங்கள் உள்ளனவா என்பதையும் சோதிக்க வேண்டியது அவசியம் என்றும் நகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

அடுத்த செய்தி