ஆப்நகரம்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

குமரி, நெல்லை, கோவை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 19 Jul 2019, 1:23 pm
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளர்.
Samayam Tamil Rain


சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தளவில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு பகுதியில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழையும், கடலூர், வால்பாறை பகுதிகளில் தலா 9 செ.மீ., அரியலூர், புதுக்கோட்டை பகுதிகளில் தலா 5 செ.மீ., மழை பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.


சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாடு முழுவதும் நேற்று வரை பெய்த மழையின் அளவு 19 சதவீதம் குறைவாக உள்ளது. இருப்பினும் நேற்று நாட்டின் பல பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது. இது போன்ற மழையால் மழை அளவு சராசரியை தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி