ஆப்நகரம்

வாட்டி எடுத்த வறுமை.. குழந்தைகளின் பசியை போக்க தலை முடியை விற்ற தாய்..!

சேலம் அருகே கணவர் இல்லாமல் வறுமையில் இருந்த பெண்ணுக்கு அம்மாவட்ட நிர்வாகம் உதவி தொகை வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

Samayam Tamil 10 Jan 2020, 8:26 pm
பசியால் தவித்து வந்த குழந்தைகளுக்கு தனது முடியை விற்று பசையாற்றிய தாயின் செயலை கண்டு சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் உதவி செய்துள்ள சம்பவம் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது .
Samayam Tamil குழந்தைகளின் பசியை போக்க தலை முடியை விற்ற தாய்


சேலம் மாவட்டம் வலசையூரை அடுத்த வீமனுர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (36). இவர் அப்பகுதியில் செங்கல் சூளை நடத்தி வந்துள்ளார். ஆனால் அதில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் அவரது குடும்பமே வறுமையின் உச்சத்துக்கே சென்றுள்ளது.


மேலும், அவர் பல்வேறு இடங்களில் வாங்கியுள்ள 5 லட்சத்துக்கும் மேலான கடன்களை திரும்ப தரக்கோரி பணம் கொடுத்தவர்கள் கேட்டதால் வேறு வழியின்றி சில மாதங்களுக்கு முன்பு செல்வம் தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில் அவரது மனைவி பிரேமா (31) தனது மூன்று குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த பிரேமா அப்பகுதியில் உள்ள செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்று வந்தார்.

அவர் வாங்கிய கூலி சிறு சிறு கடன்களை மட்டுமே அடைக்க சரியாக இருந்ததால் மூன்று வேலை உணவு சாப்பிடக்கூட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. பசியால் வாடும் குழந்தைகளை கண்டு நெஞ்சம் பதறி போன பிரேமா ஒருநாள் தற்கொலை செய்யவும் முயற்சித்துள்ளார். ஆனால் அதை கண்ட சிலர் அவரை மீட்டு அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

அதையடுத்து தனது தலை முடியை விற்று அதில் கிடைத்த 150 ரூபாயை கொண்டு தனது குழந்தைகளின் பசியை போக்கியுள்ளார். இந்த சூழ்நிலையை அறிந்த சமூக ஆர்வலர்கள் சிலர் அவரால் குறித்த முகநூலில் பதிவிட்டுள்ளனர். அதன் மூலமாக பிரேமாவுக்கு 1 லட்சம் ரூபாய் வரை உதவி கிடைத்துள்ளது. அதை வைத்து பாதி கடனை அடைந்துள்ளார் பிரேமா.

இந்த செய்தி வலைத்தளங்களில் பரவியதால் பிரேமா குறித்த தகவல் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு சென்றுள்ளது. இதையடுத்து கணவர் இன்றி குழந்தைகளுடன் கஷ்டப்படும் பிரேமாவுக்கு உதவி தொகையாக மாதம் 1000 ரூபாய் வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

அடுத்த செய்தி