ஆப்நகரம்

முதல்வர் ஸ்டாலின் பாதுகாப்பில் அதிரடி: சவாரி போட்ட பெண் காவலர்கள்!

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்படும் கோர்செல் பாதுகாப்பு பிரிவில் பெண் காவலர்கள் அணியும் உருவாக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 26 Feb 2022, 7:06 am
மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் அவர் வசம் உள்ள காவல் துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
Samayam Tamil MK Stalin


அதேபோல் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்க வேண்டாம் என்பதற்காக முதல்வரின் பாதுகாப்பு வாகனங்கள் குறைக்கப்பட்டன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது அவரது பாதுகாப்பு பணியில் முதன்முறையாக பெண் காவலர்கள் அணி உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காவல் துறை சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, இரண்டு வகையான பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றன.

கோர்செல் பிரிவு!

'கோர்செல்' என்று அழைக்கப்படும் பாதுகாப்பு பிரிவில், தமிழ்நாடு காவல் துறையில் சிறந்த காவலர்களை தேர்வு செய்து, அவர்கள் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க கூடிய வகையில் பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் நியமிக்கப்படுகின்றனர். இந்த 'கோர்செல்' பிரிவில் உள்ள காவலர்கள், மத்திய அரசின் கருப்பு பூனைப்படைக்கு நிகாரனவர்கள்.

இந்த தடவை தப்பாது: சசிகலாவுக்காக வழியை ஆயத்தப்படுத்தும் நிர்வாகிகள்!

எஸ்பி தலைமையில் இயங்கும் இந்த 'கோர்செல்' பிரிவில், ஒரு ஏடிஎஸ்பி, 2 டிஎஸ்பிக்கள், 3 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 150 காவலர்கள் பணியில் உள்ளனர். இவர்கள் சுழற்சி முறையில் முதல்வர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

செக்யூரிட்டி சென்னை போலீஸ்!

இதுதவிர 'செக்யூரிட்டி சென்னை போலீஸ்' பிரிவும் உள்ளது. இந்த பிரிவில் உள்ள காவலர்கள் முதல்வர் செல்லும் இடங்கள், நிகழ்வுகள் நடைபெறும் இடங்களில் வெடிகுண்டு சோதனை, மோப்பநாய் சோதனை உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள்.

'கோர்செல்' பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் சபாரி உடையுடன் முதல்வருக்கு பாதுகாப்பு அரண் போன்று பணிகளில் ஈடுபடுவார்கள். முதல்வரை பார்க்க வேண்டும் என்றால் 'கோர் செல்' பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி அளித்தால் மட்டும் பார்க்க முடியும். அவர்களை மீறி முதல்வரிடம் யாரும் நெருங்க முடியாது.
சார், உங்க ஆள்கள் டிக்கெட் எடுக்க மாட்டிக்கிறாங்க: டிஜிபியிடம் சென்ற புகார்!
தற்போது 'கோர்செல்' பாதுகாப்பு பிரிவில் முதல் முறையாக நன்கு பயிற்சி பெற்ற பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பெண் உதவி ஆய்வாளர் தலைமையில் 7 பெண் காவலர்கள் என மொத்தம் 8 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

புதிய அணி!

ஆதம்பாக்கம் காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் தனுஷ் கண்ணகி தலைமையில் ஆயுதப்படையை சேர்ந்த காளீஸ்வரி, பவித்ரா, மோனிஷா, சுமதி, ராமி, வித்யா, கவுசல்யா ஆகிய 7 பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட இவர்கள், தற்போது முதல்வர் பாதுகாப்பு பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களும், சபாரி உடை அணிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கென தனி கார் ஒன்றும் அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி