ஆப்நகரம்

234 தொகுதிகளிலும்... சூடாகும் அரசியல் களம்.. விஜய் மக்கள் இயக்கம் சூப்பர் அறிவிப்பு..!

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் உலக பட்டினி தினத்தன்று தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் மதிய வேளை உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Authored byதிவாகர் மேத்யூ | Samayam Tamil 25 May 2023, 6:46 pm
நடிகர் விஜய்யின் ஒவ்வொரு அரசியல் நகர்வுகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது 'லியோ' படப்பிடிப்புகளில் தீவிரம் காட்டி வரும் விஜய்யிடம் இருந்து அடுத்து என்ன அறிவிப்புகள் வர போகின்றன என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அரசியல் அரங்கிலும் இருந்து வருகிறது.
Samayam Tamil vijay


அண்மையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்திருந்த பேட்டியில் ' விஜய் அரசியலுக்கு நிச்சயம் வருவார்.. 2026 சட்டமன்ற தேர்தலில் அவர் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது' என்று புன்னகை காட்டி பேசியது கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில், நடிகர் விஜய்யின் ' தளபதி விஜய் மக்கள் இயக்கம்' சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதில் கூறப்பட்டிருப்பது;

உலகம் முழுவதும் மே 28-ஆம் தேதி அன்று "உலக பட்டினி தினம்" அனுசரிக்கப்படுகிறது. உலகளவில் நீண்டகால பட்டினியால் வாடும் மக்களை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த தினம் ஆண்டு தோறும் அனுசரிக்கப்படுகிறது.

"தளபதி" விஜய்யின் சொல்லுக்கினங்க, உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு பசி எனும் பிணி போக்கிடும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "தளபதி விஜய் மக்கள் இயக்கம்" சார்பாக "தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்" திட்டம் மூலம் வருகின்ற 28.05.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பகல் 11 மணியளவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒருவேளை (மதிய) உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள "தளபதி விஜய் மக்கள் இயக்கம்" சார்பாக "பட்டினி தினத்தை" முன்னிட்டு ஒரு நாள் (மதிய) உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டடுள்ளது.

இதன் மூலம் பசியால் வாடும் மக்களுக்கு இயன்றவரை உணவளித்து பசியினை போக்கும் விழிப்புணர்வினை சமுதாயத்தில் ஏற்படுத்தும் நோக்கத்துடன் "தளபதி விஜய் மக்கள் இயக்கம்" இந்த நலப்பணி
செய்யப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திராவிட கட்சிகளுக்கு எதிராக

அண்மையில் நடந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் முக்கிய ஆலோசனைகளை வழங்கியதாக தகவல் வெளியானது. ' திராவிட கட்சிகளுக்கு மாற்றாக விஜய் மக்கள் இயக்கத்தின் அரசியல் இருக்க வேண்டும் என்று விஜய் திட்டமிட்டிருப்பதாகவும், தளபதி விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும்போது தனித்துதான் செயல்பட வேண்டும்' என்றும் ஆலோசனை வழங்கப்பட்டதாம். மேலும்,

எதிர்கால அரசியல் களத்தில் எதையும் எதிர்க்க விஜய் மக்கள் இயக்கம் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்றும் புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியதாகவும் சொல்லப்பட்டது. குறிப்பாக, விஜய் தலைமையில் விரைவில் நடக்கவுள்ள பொதுக்கூட்டத்தில் அரசியல் சார்ந்த விஷயங்களை மட்டும் விஜய் விவாதிக்கவுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
திவாகர் மேத்யூ
திவாகர். நான் தொலைக்காட்சி, நியூஸ் ஆப், செய்தி இணைதளம் என ஊடக துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறேன். எழுத்தின் மீதான ஆர்வமும் ஊடகத்தின் மீது இருக்கும் பற்றால் இத்துறையை தேர்வு செய்துள்ளேன். அரசியல், குற்றம், அரசியல் - குற்றம் சார்ந்த அலசல், அரசு சார்ந்த செய்திகளை எவ்வித சமரசமும் இல்லாமல் எழுதி வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக TIMES Of INDIA சமயம் தமிழில் Senoir Digital Content Producer ஆக பணியாற்றுகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி