ஆப்நகரம்

சென்னை: பண்ணை வீட்டில் ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய்

சென்னையில் நடிகர் விஜய் தனது ரசிகர்களை அழைத்து ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 6 Feb 2021, 6:27 pm
ரஜினிகாந்த், கமல்ஹாசன் வரிசையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் கற்பனை கோட்டையை கட்டி வருகின்றனர். ஆனால் ரஜினிகாந்த் திடீரென ரூட்டை மாற்றியதால், தனிக்காட்டு ராஜாவாக கமல்ஹாசன் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட விஜய் இந்த நேரத்தில் அரசியலுக்கு வந்தால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று ரசிகர்கள் பலரின் விருப்பமாக உள்ளது.
Samayam Tamil file pic


ரசிகர்களின் செல்வாக்கை புரிந்துகொண்ட விஜயின் தந்தை அண்மையில் விஜய்க்கு தெரியாமலேயே கட்சியை தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால், எனக்கும், கட்சிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று விஜய் அறிவித்ததுதான் தாமதம். உடனே அந்த கட்சி கலைக்கப்பட்டது.

இந்நிலையில், வழக்கமாக மாவட்ட வாரியாக ரசிகர்களை அழைத்து நடிகர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி, இன்று சென்னை அருகே உள்ள பனையூர் பண்ணை வீட்டில் வைத்து விழுப்புரம், தேனி ஆகிய இரண்டு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை விஜய் சந்தித்துள்ளார். சுமார் 2 மணி நேரம் நடந்தாக கூறப்படும் இந்த ஆலோசனையில் 300 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்துகொண்டனர்.

காவல்துறை மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்படுகிறது: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

ஆலோசனையின் முடிவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட விஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தன்னை குறிப்பிட்டு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என்று விஜய் ஏற்கனவே மாவட்ட நிர்வாகிகளிடம் தெரிவித்திருந்த நிலையில், அது குறித்து இன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதேபோல கடந்த டிசம்பரில் நாமக்கல், திருச்சி, திருவாரூர் மாவட்ட நிர்வாகிகளிடம் விஜய் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி