ஆப்நகரம்

அதிமுகவும் எஸ்.வி.சேகரும்: அன்றும் இன்றும்...

நடிகரும், பாஜகவை சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், இதற்கு முன்பும் இதேபோன்று அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கண்டுகொள்ளாமல் விடப்பட்டது தொடர்பான விவாதங்கள் எழுந்துள்ளன

Samayam Tamil 13 Aug 2020, 6:41 pm
புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழி பாடத்திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில் நடிகரும், பாஜக பிரமுகருமான பிரமுகரான எஸ்.வி.சேகர், அதிமுகவையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சித்தார்.
Samayam Tamil மோடியுடன் எஸ்.வி.சேகர்
மோடியுடன் எஸ்.வி.சேகர்


அதற்கு எதிர்வினையாற்றிய முதல்வர் பழனிசாமி, எஸ்.வி.சேகர் எதையாவது பேசுவார். வழக்கு வந்தால் ஓடி ஒளிந்துகொள்வார் என சாடினார். இதனிடையே, யூ டியூப் சேனலில் வெளியான வீடியோவில் எஸ்.வி.சேகர் தேசியக் கோடியை அவமதித்ததாக குற்றசாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் எஸ்.வி.சேகர் மீது புகார் அளித்தார்.

இந்த விவகாரம் குறித்து அமைச்சர் கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், “எஸ்வி சேகருக்கு சிறை செல்லும் ஆசை இருந்தால் அதை அதிமுக அரசு நிச்சயம் நிறைவேற்றும்” என்றார். அத்துடன், “எஸ்.வி.சேகர் விவகாரம் தொடர்பாகச் சட்ட ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. கிடைத்தவுடன் சட்ட ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வாலும் தெரிவித்திருந்தார்.

தேசியக் கொடியை அவமதித்த புகாரில் எஸ்.வி. சேகர் மீது வழக்கு..!

அதன் தொடர்ச்சியாக, தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் எஸ்.வி.சேகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்யும் நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால், இதற்கு முன்னரும் கூட, அதாவது கடந்த 2018ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவான வகையில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தது தொடர்பாக பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிடிவுகளில் எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த சமயத்தில் அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்பட்டது.

எனினும், சென்னை புறநகர் பகுதிகளில் அவர் பதுங்கி இருந்ததாகவும், அப்போதைய தலைமை செயலாளரும், எஸ்.வி.சேகரின் நெருங்கிய உறவினருமான கிரிஜா வைத்தியநாதன் வீட்டில் அவர் அடைக்கலம் புகுந்ததாகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனாலும் அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பாஜகவின் ஆசிர்வாதம் பெற்றவர் என்பதும், தலைமை செயலாளரின் நெருங்கிய உறவினரும் என்பதால் அவர் கைது செய்யப்படவில்லை என்று கருதப்பட்டது.

அதேபோல், தற்போதும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை போன்று வழக்குப்பதிவு மட்டும் செய்து விட்டு அதனை நீர்த்துப்போக செய்து விடுவார்களா அல்லது அமைச்சர் ஜெயக்குமார் சொன்னது போல் எஸ்.வி.சேகரின் ஜெயில் ஆசை நிறைவேற்றப்படுமா என்று பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

அடுத்த செய்தி