ஆப்நகரம்

சிபிஐ விசாரணை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்: அதிமுக அமைச்சர்கள்

சிபிஐ விசாரணை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அதிமுக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 12 Oct 2018, 10:36 pm
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கும் நெடுஞ்சாலைத்துறை சம்பந்தமான ஒப்பந்தம் அனைத்தும் அவரது உறவினர்கள் மட்டும் நண்பர்களுக்கு வழங்கியதாகவும், இந்த டெண்டர் ஒப்பந்தத்தில் சுமார் 43,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகவும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். ஆனால், இந்த புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்கை சிபிஐ விசாரிக்க அதிரடியாக உத்தரவிட்டது.
Samayam Tamil admk ministers


இந்நிலையில், அதிமுக அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார் ஆகியோர் சென்னை ராயப்போட்டை தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூட்டாக கூறியதாவது: முதல்வர் பழனிசாமியின் மீதான புகார் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நாங்கள் மேல்முறையீடு செய்வோம். டெண்டர் விட்டதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. முதல்வர் மீதான புகாரை விரைவுபடுத்துவதற்காகவே எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து முடித்துவிட்டது. அதன்பிறகும் சிபிஐ விசாரணை என்பது தவறு. அதற்காக நீதிமன்றத்தை நாங்கள் எந்த குறையும் சொல்லவில்லை. திமுக ஆட்சியில் இருந்த போது, 2009ம் ஆண்டு சாலை பணிக்காக 1 கிமீ.,க்கு 33 கோடி ரூபாய் டெண்டர் விடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அதிமுக காலத்தில் 1கிமீ.,க்கு வெறும் 10 கோடி ரூபாய் மட்டுமே டெண்டர் விடப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரமும் எங்களிடம் உள்ளது. விரைவில் திமுக மீதும் நாங்கள் வழக்கு தொடருவோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி