ஆப்நகரம்

'சிதம்பரம் கல்லூரியில் தொடர்ந்து கூடுதல் கட்டணம்', கபட நாடகம் ஆடும் அதிமுக அரசு - ஸ்டாலின்

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மீண்டும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

Samayam Tamil 28 Feb 2021, 9:47 pm
தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கி வந்த சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ஒப்படைக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன் மூலம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி அரசு பல்கலைக்கழகமாகவும், மருத்துவக் கல்லூரியாகவும், இயங்கிவருகின்றன. ஆனால், மருத்துவ படிப்புக்கான கட்டணம் மற்றும் பிற அரசு மருத்துவக் கல்லூரிகளை விட 30 மடங்கு அதிகமாக வசூலிக்கப்படுவதாக குற்றசாட்டுகள் எழுந்தன.
Samayam Tamil file pic


மாணவர்கள் தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர். மேலும், ஸ்டாலின், திருமாவளவன், ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் கல்வி கட்டணத்தை எதிர்த்து குரல் கொடுத்து வந்தனர். இந்நிலையில், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பாடப் பிரிவிற்கு ரூ.13,610-ம், பி.டி.எஸ் பாடப் பிரிவிற்கு ரூ.11,610-ம், பட்ட மேற்படிப்புகள் பாடப் பிரிவிற்கு ரூ.30,000-ம், பட்ட மேற்படிப்பு பட்டய பாடப் பிரிவிற்கு ரூ.20,000-ம், பி.எஸ்.சி. (செவிலியர்), இயன் முறை மருத்துவம் மற்றும் செயல்முறை மருத்துவம் ஆகிய பாடப் பிரிவிற்கு ரூ.5,000-ம் கல்விக் கட்டணமாக நிர்ணயித்து முதல்வர் பழனிசாமி அரசாணை வெளியிட்டார்.

அதையடுத்து, மாணவர்கள் 58 நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை திரும்ப பெற்றனர். இந்தநிலையில், மாணவர்களுக்கு மீண்டும் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அது தொடர்பாக அவர் முகநூல் பதிவில், '' சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தினால், அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள கட்டணமே வசூலிக்கப்படும் என உறுதியளித்த அதிமுக அரசு அதற்கான அரசாணையை வெளியிட்டது.

மருதமலை, ஏர்போர்ட்ன்னு கெத்து காட்டும் கவுண்டம்பாளையம் தொகுதி!

அறிவிப்பது ஒன்று, நடைமுறையில் வேறொன்று எனச் செயல்படும் இந்த அரசின் ஆணவப் போக்கினால் மாணவர்களிடம் தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனது அரசாணையையே மதிக்காத அதிமுக அரசுக்கு எதிராக மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரட்டை வேடம் போட்டு கபட நாடகம் ஆடும் அதிமுக அரசு, மாணவர்களை வஞ்சிக்காமல் அரசாணைப்படி கட்டணம் வசூலிக்க வலியுறுத்துகிறேன்'' என இவ்வாறு அவர் பதிவில் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி