ஆப்நகரம்

இபிஎஸ் நெற்றியில் இருந்த ‘மை’: பொதுக்குழுவில் சாதித்த பின்னணி?

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்றைய தினம் தனது நெற்றியில் வைத்திருந்த ‘மை’-யின் பின்னணி பற்றிய தகவல் கசிந்துள்ளது

Samayam Tamil 11 Jul 2022, 3:55 pm
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை இல்லை என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பையடுத்து, பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை அருகே வானகரத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. அந்த கூட்டத்தில் அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் உருவாக்கும் தீர்மானம் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுச்செயலாளர் தேர்தலை 4 மாதங்களுக்குள் நடத்தி முடிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுவரை இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒற்றைத் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ஓபிஎஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி


இன்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வாகியிருக்கும் எடப்பாடி பழனிசாமி, தனது நெற்றியில் ‘மை’ ஒன்று வைத்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. வழக்கமாக, நெற்றியில் திருநீறுடன் காட்சியளிக்கும் எடப்பாடி பழனிசாமி, முன்னெப்போதும் இல்லாத வகையில், ‘மை’ வைத்திருந்தது பற்றி அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்த போது, அது ‘யாக மை’ என்கின்றனர். அதாவது இன்றைய பொதுக்குழுவில் அனைத்தும் தனக்கு சாதகமாக அமையும் பொருட்டு யாகம் வளர்த்து வைக்கப்பட்ட மையாம்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆன்மீகத்தின் மீது தீவிர நம்பிக்கை கொண்டவர். எந்த காரியத்தை தொடங்கினாலும் ஆஸ்தான ஜோதிடர்களிடம் தனது ஜாதகத்தை கொடுத்து பலன் பார்க்க சொல்வது ஜெயலலிதாவின் வழக்கம். அத்துடன் சில காரியங்களுக்காக அவர் யாகமும் நடத்தியுள்ளார்.

அந்த வகையில், கடந்த ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது ஆஸ்தான ஜோதிடர்களை அணுகினாராம். ஆனால், அன்றைய தினம் அவருக்கு சந்திராஷ்டமம் இருப்பதாக ஜோதிடர்கள் தெரிவித்த காரணத்தால், அதற்கு முந்தைய நாள் இரவில் யாகம் நடத்தப்பட்டு, யாக மையை நெற்றியில் பூசிக்கொண்டுதான் பொதுக்குழுவுக்கு வந்தார்.
ஜெயலலிதாவுக்கே டாட்டா காட்டிய எடப்பாடி: தொண்டர்கள் ஷாக்!
இருப்பினும், நீதிமன்ற தீர்ப்பு சாதகமில்லாமல் போனது, கைக்கு எட்டிய ஒற்றைத் தலைமை, வாய்க்கு எட்டாமல் போனதால், அன்றைய தினம் கடுகடுப்பான முகத்துடனேயே எடப்பாடி பழனிசாமி காட்சியளித்தார். மேலும், மூன்று மாதங்களுக்கு நிலைமை கொஞ்சம் சரியிருக்காது; அடுத்த வளர்பிறையிலிருந்து வளர்ச்சி இருக்கும் என்று ஜோதிடர்கள் அவரிடம் கூறினார்களாம்.

எனவே, பொதுக்குழுவுக்கு முன்பாக மகா யாகம் ஒன்றை நடத்த திட்டமிட்ட அவர் அதன்படி யாகத்தை நடத்தி அந்த யாக மையைத்தான் இன்று நெற்றியில் வைத்துக் கொண்டு பொதுக்குழுவுக்கு வந்தார். அவர் நினைத்தப்படியே அனைத்தும் இன்று நிறைவேறின. எல்லாம் யாக மையின் வேலைதான் என்று குதூகலிக்கிறார்கள்.

அடுத்த செய்தி