ஆப்நகரம்

ஜெயலலிதா பாணியில் எஸ்.பி.வேலுமணி: வழக்குகளிலிருந்து தப்பிக்க திட்டம்!

மதுரையைச் சுற்றியுள்ள கோயில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தி வருகிறார் எஸ்.பி.வேலுமணி

Samayam Tamil 18 Apr 2022, 6:59 am
அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. ஏற்கெனவே சில மாஜி அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்றது. அடுத்து எந்த மாஜி சிக்கப்போகிறார் என்ற விவாதம் அதிமுக வட்டாரங்களில் எழுந்து வருகிறது.
Samayam Tamil sp velumani


இதுவரை நடைபெற்ற ரெய்டுகளில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் மட்டும் இரு முறை சோதனை நடைபெற்றது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் எந்த துறை ரீதியான டெண்டர் என்றாலும் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி கைகாட்டியவர்களுக்கே கிடைத்ததாக சொல்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியின் வலதுகரமாக செயல்பட்ட வேலுமணி தமிழ்நாடு முழுக்க தனது செல்வாக்கையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி கோடிக்கணக்கில் வளைத்துப்போட்டதாக புகார் எழுந்துள்ளது.

எனவே வேலுமணியை எப்படியாவது கைது செய்தே தீர வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை முனைப்பு காட்டி வருகிறது. அதிகாரிகள் சிலரும் வேலுமணிக்கு உடந்தையாக இருந்ததாக கூறி அவர்களிடமும் சோதனை நடைபெற்றது. வேலுமணி அமைச்சராக இல்லாவிட்டாலும் அவருக்கு நெருக்கமான அதிகாரிகள், அவருக்கு நெருக்கமானவர்களுக்கு டெண்டர்களை வழங்குவதாக கூறப்படுகிறது.
அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்!
தன்னைச் சுற்றும் வழக்குகளிலிருந்து தப்பிக்க வேலுமணி கோயில் கோயிலாக சுற்றத் தொடங்கிவிட்டார் என்கிறார்கள் கோவை வட்டார அதிமுகவினர். அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவும், பொதுச் செயலாளர் நான் தான் என கூறிவந்த சசிகலாவும் வழக்குகளிலிருந்து தப்பிக்க கோயில்களுக்கு சென்று வருவதையும், யாகம் வளர்ப்பதையும் வாடிக்கையாக வைத்திருந்தனர். சசிகலா தற்போதும் கோயில்களுக்கு சென்று வருவதற்கே சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வரிசையில் எஸ்.பி.வேலுமணியும் அழகர்மலையில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோயிலுக்கு சென்று 11 அடி உயரமுள்ள பிரமாண்ட அரிவாளை காணிக்கையாக வழங்கியுள்ளார்.

அதிமுக உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் எஸ்.பி.வேலுமணிக்கு மதுரை மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட கிளைக்கழக ஒன்றிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த இரண்டு தினங்களாக மதுரையில் முகாமிட்டுள்ளார். இதனால் அந்தப் பகுதியில் பல முக்கிய கோயில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்து வருவதாக கூறப்பட்டது.

நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் முன்னாள் அமைச்சர் உதயகுமார், மேலூர் தொகுதி எம்எல்ஏ பெரியபுள்ளான், உசிலம்பட்டி தொகுதி எம்எல்ஏ அய்யப்பன். முன்னாள் எம்எல்ஏ சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் அழகர்மலை அடிவாரத்தில் உள்ள சக்தி வாய்ந்த பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயிலுக்கு சென்றார். அங்கு, 11 அடி உயர ராட்சத அரிவாள் காணிக்கை செலுத்தி, விசேஷ பூஜைகள் செய்துள்ளார்.

வழக்குகளில் இருந்து விடுபட வேண்டி அவர் வழிபாடு நடத்தியதாக கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள். இதுமட்டுமல்லாமல் மீனாட்சி அம்மன் கோயில், சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறை குரு பகவான் கோயில் உள்ளிட்ட பல்வேறு பரிகார தலங்களுக்கு சென்று சிறப்பு பரிகார பூஜைகள் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி