ஆப்நகரம்

கட்சி நிர்வாகிகளை நியமிக்க தேர்வு நடத்தும் அதிமுக: இந்தியாவில் முதன்முறை!

இந்தியாவில் முதன்முறையாக கட்சி நிர்வாகிகளை நியமிக்க திறனாய்வுத் தேர்வு நடத்தப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது

Samayam Tamil 5 Aug 2020, 4:13 pm
தமிழகத்தில் மாவட்டம், நகரம், பகுதி, ஒன்றியம் ஆகிய நிலைகளில் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவிற்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர். திறமை மற்றும் கழக விசுவாசத்தின் அடிப்படையில் பொறுப்பாளர்களைத் தேர்வு செய்ய கட்சித் தலைமை ஆணையிட்டுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


பொறுப்பாளர் நியமனங்களில் திறமையானவர்கள் யாரும் விடுபட்டு விடக்கூடாது என்ற நோக்கிலும், வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும் என்ற அடிப்படையிலும் மூன்று நிலைகளில் தகவல் தொழில் நுட்பப் பிரிவுக்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அதன்படி, அதிமுகவின் தகவல் தொழில் நுட்பப் பிரிவுக்கான நிர்வாகிகளை நியமிக்க, சென்னை மண்டலத்தில் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு அரசியல் கட்சி தனது நிர்வாகிகளை நியமிக்க திறனாய்வுத் தேர்வினை நடத்துவது, இதுவே முதல் முறையாகும்.

கழகப் பொறுப்புகளை வகிக்க ஆர்வமுள்ளோர் முதலில் www.aiadmkitwing.com/chennai என்கிற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

பாஜகவை கழட்டிவிடுகிறதா அதிமுக? எஸ்.வி.சேகர், ஜெயக்குமார் உரசல் பின்னணி!

அவற்றின் அடிப்படையில் முதலில், அவர்களது பின்னணி விவரங்கள் (Personal Background Verification) சரிபார்க்கப்படும். அடுத்து இரண்டாவது நிலையில், பி- எஸ்.ஏ.டி. (P-SAT - Political and Social media awareness and Aptitude Test) எனப்படும் திறனாய்வுத் தேர்வு ஆன்லைன் வழியாக நடத்தப்படும். இதில் நான்கு விடைகள் கொடுத்து ஏதேனும் ஒரு விடையைத் தேர்வு செய்யும் 'மல்டிபிள் சாய்ஸ் கொஸ்டின்ஸ்' (Multiple Choice Questions) மாடலில் 32 கேள்விகள் கேட்கப்படும். அவற்றுக்கு 20 நிமிடங்களுக்குள் அவர்கள் பதில் அளிக்க வேண்டும். இதில் குறிப்பிடத்தகுந்த அம்சம் என்னவென்றால் தேர்வு எழுதும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான வினாத்தாள்கள் ஆன்லைனில் வரும் வகையில், வடிவமைக்கப்பட்ட மென் பொருளில் இத்தேர்வு நடத்தப்படும்.

இந்த இரண்டு நிலைகளிலும் வெற்றி பெற்றவர்கள், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் தேர்ச்சி பெறுவோர் அ.இ.அ.தி.மு.க.வின் சென்னை மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவிற்கான நிர்வாகிகளாக நியமிக்க கழகத் தலைமைக்கு பரிந்துரைக்கப்படுவர். இந்தியாவிலேயே முதன்முறையாக அரசியல் கட்சி ஒன்று, திறனாய்வுத் தேர்வு அடிப்படையில் தமது நிர்வாகிகளை நியமிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி