ஆப்நகரம்

ஆற்றில் குளித்த கூலித் தொழிலாளியை நீருக்குள் இழுத்துச் சென்ற முதலை

சிதம்பரம் அருகே ஆற்றில் மனைவியுடன் குளித்த கூலித் தொழிலாளியை முதலை கடித்து இழுத்துச் சென்றதால் பரபரப்பு உண்டாகியுள்ளது. முதலைகளிடமிருந்து மக்களை காக்க மாவட்ட நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

Samayam Tamil 25 Apr 2019, 10:39 am
சிதம்பரம் அருகே ஆற்றில் மனைவியுடன் குளித்த கூலித் தொழிலாளியை முதலை கடித்து இழுத்துச் சென்றதால் பரபரப்பு உண்டாகியுள்ளது. மாயமான கூலித் தொழிலாளியை கிராம மக்கள் படகில் சென்று தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. 3 மணி நேரத்திற்கு பிறகும் சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறை அதிகாரிகள் வரவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
Samayam Tamil crocodile


சிதம்பரம் அருகே உள்ள பெராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயமணி (45). கூலித் தொழிலாளியான இவர் இன்று இரவு தனது மனைவி முத்துலட்சுமி என்பவருடன் அருகில் மேலகுண்டலபாடி கிராமத்தில் உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஆற்றுக்குள் இருந்த முதலை ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் ஜெயமணியை கடித்து குதறி தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி முத்துலட்சுமி மற்றும் அந்த பகுதியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் சத்தம்போட்டு கத்தியபடியே முதலையை விரட்டினர்.

ஆனால் முதலை ஜெயமணியை விடாமல் ஆற்றின் ஆழமான பகுதிக்கு இழுத்துச் சென்று விட்டது. இந்த தகவலை அறிந்த மேலகுண்டலபாடி மற்றும் பெராம்பட்டு கிராம மக்கள் ஆற்றுக்குள் படகில் சென்று முதலை இழுத்துச் சென்ற ஜெயமணியை தேடிப் பார்த்தனர்.

இருட்டான பகுதியாக இருந்ததாலும், புதர் நிறைந்த பகுதியாக இருந்ததாலும் கிராம மக்களால் நீண்ட நேரம் தேட முடியவில்லை.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் வருவாய் துறையினர், அண்ணாமலைநகர் போலீசார் மற்றும் சிதம்பரம் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து தேடிப் பார்த்தனர்.

ஆனாலும் ஜெயமணி கிடைக்கவில்லை. இதையடுத்து ஜெயமணியை தேடும் பணி நிறுத்தப்பட்டு, காலையில் மீண்டும் தேடுவதாக முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்திற்கு 3 மணி நேரமாகியும் மாயமானவரை தேடிப் பார்க்க சிதம்பரம் தீயணைப்பு துறையினர் வரவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.

இந்த சம்பவம் குறித்து பெராம்பட்டு கிராம மக்கள் கூறுகையில்,

’அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால்தான் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. மக்கள் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஆற்றில் வனத்துறை முதலைகளை விடுவதால் தண்ணீரை பயன்படுத்த முடியவில்லை. தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஆற்றில் முதலைகளை விடுவதால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். முதலைகளுக்கென தனியாக ஒரு இடம் அமைத்து அந்த இடத்தில் முதலைகளை பாதுகாக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வேளக்குடி கிராமத்தைச் சேர்ந்த பாண்டித்துரை என்பவர் இதுபோல் முதலையால் ஆற்றுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். அவருடைய உடல் கூட இதுவரை கிடைக்காத நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் பலரும் முதலைகள் தாக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.

சிலருக்கு கை, கால் போன்ற உறுப்புகள் ஊனமாகி உள்ளது. அதனால் முதலைகளிடமிருந்து மக்களை காக்க மாவட்ட நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

அடுத்த செய்தி