ஆப்நகரம்

ஆவின் குடிநீர்: திமுகவினர் சம்பாதிக்க புது ரூட் - அண்ணாமலை விளாசல்..!

ஆவினில் குடிநீர் விற்பனை செய்யப்படும் என்ற தமிழக அரசின் முடிவுக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

Authored byதிவாகர் மேத்யூ | Samayam Tamil 21 May 2023, 2:39 pm
தமிழக அரசின் ஆவின் நிறுவனம் பால், பால் பொருட்கள் விற்பனையை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கூடுதலாக குடிநீரையும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் அனைத்து விற்பனை நிலையங்கள் மூலமாக குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படவுள்ளது.
Samayam Tamil aavin


முதற்கட்டமாக அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் வரையிலான குடிநீர் பாட்டில்களை அறிமுகம் செய்து நாளொன்றுக்கு ஒரு லட்சம் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய ஆவின் நிர்வாகம் இலக்கு வைத்துள்ளது.

இந்த நிலையில் உயிர் ஆதாரமான சுத்தமான குடிநீரை மக்களுக்கு இலவசமாக கிடைக்க உறுதி செய்ய வேண்டிய அரசு அதையும் விற்பனைக்கு கொண்டு வந்ததோடு டாஸ்மாக்கிற்கு வைக்கும் இலக்கை போல குடிநீர் பாட்டிலுக்கு இலக்கு வைப்பதா என்று எதிர்க்கட்சிகளும் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதனை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அண்ணாமலை, ஆவின் நிறுவனத்தின் மூலமாகக் குடிநீர் பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 2014-2015ஆம் ஆண்டு, குறைந்த விலையில் குடிநீர் விற்பனை செய்வதாகக் கடந்த ஆட்சிக் காலத்தில் அறிவித்த போது, அதனை இலவசமாக வழங்க வேண்டும், குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு, அரசே விற்பனையில் ஈடுபடக் கூடாது என்றெல்லாம் போராட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின் தற்போது ஆவின் நிறுவனத்தின் மூலம் குடிநீர் விற்பனை செய்யப் போவதாக அறிவித்திருப்பது, திமுகவினர் பலன் பெறுவதற்காகவோ, என்ற சந்தேகம் எழுகிறது.

குடிநீருக்கு வரி செலுத்தி வரும் பொதுமக்கள், சரியான முறையில் குடிநீர் வினியோகம் இல்லாமல் அவதியுறும்போது, அதற்குத் தீர்வு காணாமல், குடிநீர் விற்பனையில் அரசு ஈடுபடப் போவதாக அறிவித்திருப்பது எந்த வகையில் நியாயம்?

உடனடியாக, அனைத்து மக்களுக்கும் சரியான, சுத்தமான குடி நீர் வினியோகத்தை உறுதி செய்யும் வழிமுறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், தங்கள் கட்சியினர் சம்பாதிப்பதற்கு, புதிய புதிய திட்டங்களைக் கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.
எழுத்தாளர் பற்றி
திவாகர் மேத்யூ
திவாகர். நான் தொலைக்காட்சி, நியூஸ் ஆப், செய்தி இணைதளம் என ஊடக துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறேன். எழுத்தின் மீதான ஆர்வமும் ஊடகத்தின் மீது இருக்கும் பற்றால் இத்துறையை தேர்வு செய்துள்ளேன். அரசியல், குற்றம், அரசியல் - குற்றம் சார்ந்த அலசல், அரசு சார்ந்த செய்திகளை எவ்வித சமரசமும் இல்லாமல் எழுதி வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக TIMES Of INDIA சமயம் தமிழில் Senoir Digital Content Producer ஆக பணியாற்றுகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி