ஆப்நகரம்

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குறித்து அதிர்ச்சி தகவல்; தலை, நெஞ்சில் குறிவைத்து சுட்டது அம்பலம்!

தூத்துக்குடி: துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அதிர வைக்கும் உண்மை தெரியவந்துள்ளது.

Samayam Tamil 22 Dec 2018, 9:12 pm
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன் 100வது நாள் போராட்டத்தின் போது, வன்முறை வெடித்தது.
Samayam Tamil Tuticorin Shoot


அப்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அதில், பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டதால் தற்காப்பிற்காக சுட்டதாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில், கொல்லப்பட்ட 13 பேரில் 12 பேருக்கு தலை மற்றும் நெஞ்சில் குண்டு பாய்ந்திருக்கிறது.

இவர்களில் பெரும்பாலானோர் பின்னாளில் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டனர். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலை தனியார் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பியுள்ளது.

கொல்லப்பட்டவர்களில் ஸ்னோவ்லின் என்ற 17 வயது மாணவி தான் மிகவும் இளையவர். இவருக்கு தலை வழியாக சென்ற குண்டு, வாய் வழியாக வெளியே வந்துள்ளது. கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களை ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் தொடர்பு கொண்டனர்.

அதில் 10 குடும்பத்தினர் எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்று கூறியுள்ளனர். ஒரு குடும்பத்தார் வழக்கறிஞரைத் தொடர்பு கொண்டு பேசி வருவதாக குறிப்பிட்டனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் மொத்தம் 69 குண்டுகள் பயன்படுத்தப் பட்டுள்ளன.

அதில் 30 எஸ்.எல்.ஆர் வகை துப்பாக்கியில் இருந்தும், 4 ரவுண்டுகள் 303 ரைஃபில்ஸ் மூலமும், 12 ரவுண்டுகள் 410 வகை துப்பாக்கி மூலமும் சுடப்பட்டுள்ளன. தற்காப்பிற்காகவும், எச்சரிக்கும் விதமாகவும் சுட வேண்டும் என்றால் முதலில் முட்டிக்கு கீழ் தான் சுட வேண்டும்.

ஆனால் தூத்துக்குடி சம்பவத்தில் நேர்மாறாக இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி