ஆப்நகரம்

அடித்து வெளுக்கும் கனமழை: அணைகள் நிரம்புவதால் மக்கள் மகிழ்ச்சி!

தென்மேற்கு பருவமழை வலுத்து வரும் நிலையில் தமிழ்நாட்டு அணைகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Samayam Tamil 6 Aug 2020, 8:48 am
தமிழ்நாட்டுக்கு அதிக மழைப்பொழிவை தருவது வடகிழக்கு பருவமழைதான் என்றாலும், தென்மேற்கு பருவமழை சரியாக பெய்தால்தான் தமிழ்நாட்டு அணைகளுக்கான நீர்வரத்து அதிகரிக்கும். அதைவைத்தே அந்த ஆண்டுக்கான விவசாய பாசனம், குடிநீர் தேவை ஆகியவற்றை தமிழ்நாடு பெருமளவு பூர்த்தி செய்யும்.
Samayam Tamil tamil nadu dams


அந்தவகையில் கடந்த சில நாள்களாக தென்மேற்கு பருவமழை வலுத்துள்ளதன் காரணமாக பல்வேறு அணைகள் வேகமாக நிரம்பிவருகின்றன.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தத்து. அந்தவகையில் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 58.1 செ.மீ மழை கொட்டித்தீர்த்துள்ளது.கூடலூரில் 37.5 செ.மீ மழையும், மேல் பவானியில் 31.9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. நீலகிரியில் நள்ளிரவு முதல் வழக்கத்தை விட இரு மடங்கு கூடுதலாக 322.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

நீலகிரி மழை: கொரோனா வார்டில் விழுந்த மரம்... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி நோயாளிகள்

இதனால் நீலகிரி, நொய்யல் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. நீலகிரி மாவட்டத்தில் மழையால் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர். தேவையில்லாமல் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

அமராவதி அணையிலிருந்து இன்று முதல் பாசனம், குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அணையிலிருந்து மதகு வழியாக கரூர் நகரம் வரை 11 நாள்களுக்கு 1110 மில்லியன் கன அடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிரதான கால்வாய் வழியாக 15 நாள்களுக்கு 570 மில்லியன் கன அடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: விதிகள் வகுக்கப்படவில்லை-தமிழக அரசு

தேனி மற்றும் முல்லை பெரியாறு நீர் பிடிப்பு பகுதியில் பெய்துவரும் கனமழையால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக கர்நாடகாவிலுள்ள கபிணி, கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு 44700 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீர் இன்று மாலை தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஒகேனக்கல் ஆற்றில் குளிக்கவும், படகு இயக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி