ஆப்நகரம்

அரக்கோணம் அருகே பேரதிர்ச்சி; தடை செய்யப்பட்ட போதைப் பொருள் குடோன் கண்டுபிடிப்பு!

வேலூர்: தடை செய்யப்பட்ட போதை பாக்குகள் மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த குடோன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 12 Jan 2019, 12:27 pm
வேலூர் மாவட்டம் அரக்கோணம் தக்கோலம் பகுதியில் கடம்பநல்லூர் என்ற இடத்தில் தனியாக வீடு ஒன்று அமைந்துள்ளது. அந்த வீட்டிற்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் சிலர் வந்து சென்றுள்ளனர்.

இதை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் பார்த்துள்ளனர். உடனே தக்கோலம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது 149 பெரிய பண்டல்களில் தடை செய்யப்பட்ட போதை பாக்குகள் மற்றும் புகையிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வீட்டில் இருந்த லட்சுமிகாந்தன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய இருவரைக் கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி