ஆப்நகரம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு முழு அடைப்பு போராட்டம்: தமிழகத்தில் பெரிய பாதிப்பு இல்லை

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய போராட்டம் இன்று நடைபெறும் நிலையில் தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை.

Samayam Tamil 10 Sep 2018, 9:35 am
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய போராட்டம் இன்று நடைபெறும் நிலையில் தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை.
Samayam Tamil credit-card
தமிழ்நாடு - கர்நாடகா இடையே பேருந்து போக்குவரத்து நிறுத்தம்


அகில இந்திய காங்கிரஸ் கட்சி, பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்தை இன்று முன்னெடுத்து வருகிறது. இதற்கு தேசியளவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 20 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு திமுக, பாமக, மதிமுகம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

அதேபோல தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை, தொமுச பேரவை, சிஐடியூ, எஐடியூசி, ஜஎன்டியூசி உள்ளிட்ட 10 தொழிற்சங்கள் இந்த முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. இது குறித்து ஆளும் அதிமுக அரசு, தேமுதிக கட்சி, மக்கள் நீதி மய்யம் போன்றவை தங்களது நிலைபாட்டை இன்னும் அறிவிக்கவில்லை.

எனினும், தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத்தால் பெரியளவுகளில் பாதிப்பு ஏற்படவில்லை. சென்னை உட்பட தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் மட்டும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு வசிக்கும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்கங்கள் முழு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், லாரி உரிமையாளர்கள் சங்கம், மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் 4.5 லட்சம் லாரிகள் ஓடவில்லை. கனரக வாகனங்கள், தானிகள், வேன்கள் உள்ளிட்டவையும் ஓடவில்லை.

பெரும்பாலான தமிழக மாவட்டங்களில், பால் விற்பனை நிலையம், மருந்தகம், பெட்ரோல் பங்குகள் முழு வேலை போராட்டத்தில் இருந்து விதிவிலக்கு பெற்றுள்ளன. இதனால் அவை இன்று வழக்கம் போல இயங்கி வருகின்றன.

அடுத்த செய்தி