ஆப்நகரம்

பாஜகவுக்கு தாவுகிறாரா சசிகலா புஷ்பா- டெல்லியில் ஆட்டம் ஆரம்பம்!

தமிழகத்தில் பாஜக அடுத்த அதிரடி திட்டத்தை, சசிகலா புஷ்பா மூலம் செயல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 27 Jun 2019, 7:02 pm
தமிழக அரசியலில் அதிமுகவில் இருந்த போது, ஜெயலலிதாவிற்கு எதிராகவே போர்க்கொடி தூக்கியவர் சசிகலா புஷ்பா. என்னை ஜெயலலிதா அடித்தார் என்று அழுது புலம்பியதை நாடே அதிர்ச்சியுடன் பார்த்தது. அதன்பிறகு ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்தார்.
Samayam Tamil Sasikala Pushpa


மாநிலங்களவை எம்.பியாக இருக்கும் இவர், சமீப காலமாக பரபரப்புகளுக்கு ஆளாகியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன், நாடாளுமன்றத்தில் பேசிய இவர், மத்திய அரசு நல்ல திட்டங்களைக் கொண்டு வருகிறது.

மோடியின் சமூக நலத் திட்டங்கள் தமிழகத்தில் சரியாகக் கொண்டு சேர்க்கப்படவில்லை. இந்த திட்டங்களால் பல கோடி பேர் பயன் அடைந்திருக்கின்றனர். இருப்பினும் தமிழ்நாட்டில் தவறாக புரிதல் இருக்கிறது.

இதை மாற்ற நான் முயற்சி செய்வேன். மக்கள் மத்தியில் மோடி மீதான நம்பகத் தன்மையை ஏற்படுத்துவேன். தமிழகத்தில் மோடி ஆட்சி வேண்டும் என்று அதிரடியாக புகழ்ந்து தள்ளினார். இது அதிமுக தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதன் பின்னணியில் பாஜகவின் உள்ளடி வேலைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது மாநிலங்களவையில் பாஜகவிற்கு பெரும்பான்மை குறைவு. இதனால் மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை நிறைவேற்றுவதில் சிக்கல் எழுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு பெரும்பான்மைக்கான வேலைகளை பாஜக முடுக்கி விட்டுள்ளது. அதில் அதிமுக எம்.பிக்களை தங்கள் வசம் கொண்டு வரும் முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது.

இதற்காக சசிகலா புஷ்பா மூலம் வேலையை தொடக்கியுள்ளனர். ஏற்கனவே அதிமுகவிற்குள் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு, முக்கிய புள்ளிகளை இழுக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

அடுத்த செய்தி