ஆப்நகரம்

ஆண் குழந்தை சடலத்தை இழுத்துச் சென்ற நாய் - ஒசூர் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி!

ஒசூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்றுள்ள சம்பவம், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Samayam Tamil 22 Mar 2019, 12:50 pm
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கர்னூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகம்மா - முரளி தம்பதி. இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் 4வது முறையாக கர்ப்பிணியான நாகம்மா, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்து வந்துள்ளார்.
Samayam Tamil Hosur Baby


இந்த சூழலில் நேற்று காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனே தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நடைபெற்ற பரிசோதனையில் குழந்தை எடை குறைவாக இருப்பதாக தெரிவித்தனர்.

இதனால் பச்சிளம் குழந்தைகள் மையத்தில் வைக்க வேண்டும் என்றும், உடனே ஒசூர் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறும் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, நேற்று காலை 6 மணியளவில் சென்றுள்ளனர். அங்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் ஏற்கனவே கூறியபடி குழந்தை எடை குறைவாக இருந்துள்ளது.

இதைத்தொடர்ந்து இரவு 8 மணியளவில் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்ததாக கூறி, நாகம்மாவிடம் ஒப்படைத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், என்ன செய்வதென்று தெரியவில்லை. பின்னர் பிரசவ வார்டில் வைத்தனர். ஆனால் அங்கிருந்த தாய்மார்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் கழிவறையில் ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்தனர். இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் சடலத்தை எடுக்க வந்த போது, அதனைக் காணவில்லை. அங்கிருந்த துப்புரவு பணியாளரிடம் கேட்ட போது, அதை குப்பை தொட்டியில் வீசிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனால் அங்கிருந்து சோகத்துடன் திரும்பிச் சென்றனர். பின்னர் குப்பையில் இருந்த சடலத்தை நாய்கள் கடித்து தனித்தனியாக தூக்கிச் சென்றுள்ளன. இதனால் தலை, கைகள், கால் பகுதி இன்றி உடல் மட்டும் கிடந்ததை ஆம்புலன்ஸ் டிரைவர் கண்டுள்ளார்.

உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி