ஆப்நகரம்

காவிரி வழக்கில் தீர்ப்பு: ஓசூரில் பேருந்துகள் முடக்கம்

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியாக உள்ளதால் தமிழகம், கர்நாடகா இடையே பேருந்துப் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

Samayam Tamil 16 Feb 2018, 10:21 am
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியாக உள்ளதால் தமிழகம், கர்நாடகா இடையே பேருந்துப் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
Samayam Tamil bus transport halts as cauvery dispute verdict expected today
காவிரி வழக்கில் தீர்ப்பு: ஓசூரில் பேருந்துகள் முடக்கம்


காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பின் மீதான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ள நிலையில் தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் இரு மாநில எல்லையில் உள்ள ஓசூரில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

பெங்களூருரில் இருந்து ஒசூர் வரை இயக்கப்படும் கர்நாடக மாநில பேருந்துகளும் அத்திபலேவுடன் நிறுத்தப்படுகின்றன. அங்கிருந்து ஓசூருக்கு நடந்தே பயணிகள் வர வேண்டியுள்ளது. இதனால் இரு மாநிலங்களுக்கு இடையே பயணிக்கும் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

காவிரி வழக்கின் பின்னணி:

2007ஆம் ஆண்டு பிப்ரவரியில் காவிரி நடுவர் மன்றம் காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக இறுதித் தீர்ப்பு வழங்கியது. இதன்படி, கர்நாடக அரசு தமிழகத்துக்கு 10 மாத இடைவெளியில் 192 டிஎம்சி காவிரி நீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்கள் தனித்தனியாக மேல்முறையீடு செய்துள்ளன. இந்த தீர்ப்பில் விளக்கம் கோரி தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி அரசுகள் மனுக்களை தாக்கல் செய்துள்ளன. இந்த 4 மாநிலங்களின் வழக்குகள் ஒன்றாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன் விசாரிக்கப்பட்டது.

இந்த வழக்கில் 4 மாநிலங்களும் தங்கள் தரப்பு வாதங்களை ஆவணங்களுடனும் நிபுணர்களின் கருத்துக்களுடனும் முன்வைத்தன. இதனையடுத்து கடந்த செப்டம்பர் 2017ல் இவ்வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி மறு உத்தரவு வரும் வரை கர்நாடக அரசு வினாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால், கர்நாடக அரசு இந்த தீர்ப்பின்படி தமிழகத்துக்கு தண்ணீர் வழங்கவில்லை.

இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது என்று நீதிபதிகள் பலமுறை தெளிவுபட கூறியுள்ளனர் என்பதால் இந்தத் தீர்ப்பு மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தீர்ப்பில் தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று கருதப்படுகிறது. அதுவே 1991ஆம் ஆண்டு முதல் தொடர் பிரச்னையாக நிலவும் காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்திற்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி