ஆப்நகரம்

என் மீது தொடரப்பட்ட வழக்கை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்: கார்ட்டூனிஸ்ட் பாலா

நெல்லை தீக்குளிப்பு சம்பவத்தை பற்றி கார்டூன் வெளியிட்டதால், தனது மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கார்ட்டூனிஸ்ட் பாலா மனு அளித்துள்ளார்.

TNN & Agencies 15 Nov 2017, 1:51 pm
நெல்லை தீக்குளிப்பு சம்பவத்தை பற்றி கார்டூன் வெளியிட்டதால், தனது மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கார்ட்டூனிஸ்ட் பாலா மனு அளித்துள்ளார்.
Samayam Tamil cartoonist bala petition to madurai high court to dismiss his case
என் மீது தொடரப்பட்ட வழக்கை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்: கார்ட்டூனிஸ்ட் பாலா


கந்துவட்டி கொடுமையால் நெல்லையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்தனர். இந்த சம்பவம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த சம்பவத்தை விமர்சிக்கும் வகையில் கார்டூனிஸ்ட் பாலா கார்டூன் ஒன்றை வரைந்து வெளியிட்டார்.

இதனால் இவர் மீது மாவட்ட ஆட்சியர் வழக்கு தொடர்ந்தார்.மேலும் அவர் கைது செய்யப்பட்டு , ஜாமின் வழங்கப்பட்டது.

இந்நிலையில் தன்மீது தொடங்கப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் கார்ட்டூனிஸ்ட் பாலா மனு தாக்கல் செய்துள்ளார்.


சென்னை கோவூர் சத்யாநகரை சேர்ந்த பாலமுருகன் என்ற பாலா, மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
நான் சென்னையில் வசித்து வருகிறேன். கடந்த மாதம் 23–ந் தேதி நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கந்துவட்டி கொடுமையால் இசக்கிமுத்து, அவரது மனைவி, 2 மகள்கள் தீக்குளித்து பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவத்தையடுத்து அக்டோபர் 24–ந் தேதி ஒரு கார்ட்டூன் வரைந்து என்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டேன். அதில் தமிழக முதல்–அமைச்சர், மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் அரை நிர்வாண கோலத்தில் நின்று தீக்குளிப்பு சம்பவத்தை பார்ப்பது போல் சித்தரித்திருந்தேன்.

இந்த நிலையில் நெல்லை மாவட்ட கலெக்டர் அளித்த புகாரின் பேரில், என் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000–ன்படி நெல்லை போலீசார் வழக்குபதிவு செய்தனர். அதன்பேரில் நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கடந்த 5–ந் தேதி சென்னைக்கு வந்து என்னை கைது செய்தார். இந்த வழக்கில் கூறப்பட்டுள்ளதுபோல நான் எந்த குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை. என்னை கைது செய்தது இயற்கை நீதிக்கு முரணானது. எனவே என் மீது போலீசார் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
மேலும் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

அடுத்த செய்தி