ஆப்நகரம்

மீண்டும் தள்ளி போகிறதா 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு?

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேதி நெருங்கி வரும் நிலையில், அதனை ஒத்தி வைக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது

Samayam Tamil 2 Jun 2020, 5:06 pm
தமிழகத்தில் தள்ளி வைக்கப்பட்ட 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்த தமிழ்நாடு அரசு, அதற்கான அட்டவணையையும் வெளியிட்டது. மேலும், ஒத்தி வைக்கப்பட்ட பிளஸ்1 தேர்வுகள், ஊரடங்கால் 12ஆம் வகுப்பு தேர்வை எழுத முடியாமல் விடுபட்டவர்களுக்கான மறு தேர்வுக்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டன.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


ஆனால், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் இல்லை என்ற நிலை வரும் வரை மாணவர்களின் நலனை கருதி பொதுத் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து, ஜூன் 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 15ஆம் தேதி முதல் ஜூன் 25ஆம் தேதி வரை நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். அதேபோல், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 16ஆம் தேதியும், விடுபட்டவர்களுக்கான 12ஆம் வகுப்பு மறுதேர்வு ஜூன் 18ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி!

எனினும், ஜூன் 15ஆம் தேதிக்குள் கொரோனா முற்றிலும் குணமாகிவிடும் என கருத முடியாது. எனவே, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை கொரோனா பாதிப்பு முழுவதுமாக நீங்கிய பின்னரே நடத்த வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனிடையே, மாநிலங்கள் பொதுத்தேர்வுகள் நடத்த தடையில்லை என மத்திய அரசு அறிவித்திருந்தது. சில நிபந்தனைகளுடன் தேர்வுகளை நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, பொதுத்தேர்வுகளை திட்டமிட்டபடி நடத்த பள்ளிக்கல்வி துறை தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆசிரியர் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. முன்னதாக, வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா என்பவர் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு உள்ளிட்ட தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.

ரேஷன் கடையில் மேலும் ஒன்று இலவசமாக கிடைக்க போகுது..!

இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினரோ, ஆசிரியர் சங்கத்தினரோ, மாணவர்கள் தரப்பிலோ, பள்ளிகள் தரப்பிலோ வழக்கு தொடரவில்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், ஆசிரியர் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்துள்ளதால், இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என தெரிகிறது. இதன்மூலம் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அடுத்த செய்தி